"மின்சார கட்டணத்தை பார்த்தாலே ஷாக் அடிக்கிறது" - திண்டுக்கல் தேர்தல் பிரச்சாரத்தில் நத்தம் விஸ்வநாதன் பேச்சு!
திண்டுக்கல் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக்கை ஆதரித்து முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து, வேட்பாளர்களை அறிவித்து, தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், தேர்தல் பரப்புரையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்த நிலையில், திண்டுக்கல் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக்கை ஆதரித்து கன்னிவாடியில் தேர்தல் பரப்புரை நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்று அவருக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்
இந்த பரப்புரையில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது..
"3 ஆண்டு கால ஆட்சியில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை.
வாக்குறுதிகளை மக்களிடம் கொடுத்துவிட்டு ஆட்சிக்கு வந்து ஏதும் செய்யாமல் உள்ள திமுகவினர் தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்காக புதிய வாக்குறுதிகள் கொடுக்கின்றனர். கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் காற்றில்
பறக்கும் சூழ்நிலையில் புதிதாக வாக்குறுதிகள் வேறு. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு
வரியை குறைப்போம் வருவாயை பெருக்குவோம் என சொல்லிய திமுகவினர், ஆட்சிக்கு வந்த பின்பு அதிக அளவில் வரியை உயர்த்தி விட்டனர்.
குறிப்பாக மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. மின்சார கட்டணத்தை பார்த்தாலே ஷாக் அடிக்கிறது. அனைத்து பொருட்களின் விலைவாசியும் அதிகரித்துள்ளது. மூன்று ஆண்டுகளில் 3 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி தமிழ்நாட்டை கடன் மாநிலமாக மாற்றி திவாலாக்கி உள்ளனர். பெட்ரோல், டீசல் விலையை மத்திய பாஜக அரசு உயர்த்தி எல்லா பொருட்களின் விலை ஏற்றத்திற்கும் காரணமாகி உள்ளது.
பெட்ரோல, டீசல் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியும் மாநிலத்தில், ஆளும் திமுக ஆட்சியும் மக்கள் விரோத ஆட்சி. மக்களுக்கு எதிரான ஆட்சி. இரண்டு கட்சிகளுக்கும் நீங்கள் பாடம் புகட்ட வேண்டும். இந்த தேர்தலில் நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து தக்க பாடம் புகட்ட வேண்டும். முகமது முபாரக் வெற்றி பெறும் பட்சத்தில் திண்டுக்கல் தொகுதி இந்தியாவின் முன்மாதிரி தொகுதியாக மாற்றப்படும்."
இவ்வாறு அவர் பேசினார்.