முதற்கட்ட தேர்தலில் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள், 2 முன்னாள் முதலமைச்சர்கள் போட்டி!
நாளை நடைபெறும் முதல்கட்ட தேர்தலில் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள், 2 முன்னாள் முதலமைச்சர்கள் களத்தில் உள்ளனர்.
நாடு முழுவதும் நாளை தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல் கட்டமாக 21 மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு நாளை (ஏப்.19) நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள், 2 முன்னாள் முதலமைச்சர்கள் களத்தில் உள்ளனர்.
அதன்படி, தெலங்கானா ஆளுநராகவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநகராகவும் பதவி வகித்த தமிழிசை செளந்தரராஜன், தனது பதவிகளை கடந்த மாதம் ராஜிநாமா செய்தாா். பாஜக அவரை தென் சென்னை தொகுதியில் வேட்பாளராக பாஜக களமிறக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் நீலகிரி தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பி.யுமான ஆ.ராசாவும், தற்போதைய மத்திய அமைச்சரும் பாஜக எம்.பி-யுமான எல்.முருகனும் போட்டியிடுகின்றனா். மத்திய அமைச்சா் எல்.முருகன், முதல் முறையாக மக்களவைத் தோ்தலில் போட்டியிடுகிறாா்.
மகாராஷ்டிரத்தின் நாக்பூர் தொகுதியில் 3-ஆவது முறையாக மத்திய சாலை, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி போட்டியிடுகிறார். அவர் கடந்த 2014 மக்களவைத் தோ்தலில் 7 முறை எம்.பி-யாக இருந்த விலாஸ் முத்தேம்வாரை எதிா்த்து போட்டியிட்டு 2.84 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். அதேபோல் நிதின் கட்கரி கடந்த 2019 தோ்தலில் மாநில காங்கிரஸ் தலைவா் நானா படோலேயைவிட 2.16 லட்சம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.
அருணாசல பிரதேசத்தின் அருணாசல் மேற்கு தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு, இந்தத் தொகுதியில் 3 முறை வெற்றி பெற்றவா். அவரை எதிா்த்து மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான நாவம் துகி போட்டியிடுகிறாா்.
மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சரும், தற்போதைய எம்.பியுமான சா்வானந்த சோனோவால் அசாமின் திப்ரூகா் தொகுதியில் போட்டியிடுகிறாா்.
உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரில் மத்திய அமைச்சர் சஞ்சீவ் பாலியான் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, சமாஜவாதியின் ஹரீந்திர மாலிக் போட்டியிடுகிறாா். இவா்களுடன் பகுஜன் சமாஜ் வேட்பாளா் தாரா சிங் பிரஜபதியும் களத்தில் உள்ளாா்.
மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சராக உள்ள ஜிதேந்திர சிங், ஜம்மு-காஷ்மீரின் உதம்பூா் தொகுதியில் 3வது முறையாக களமிறங்குகிறார். இவர் 2 முறை எம்.பியாக இருந்துள்ளார்.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சா் பூபேந்திர யாதவ் ராஜஸ்தானின் ஆல்வாா் தொகுதியில் போட்டியிடுகிறாா். அவரை எதிா்த்து காங்கிரஸ் சாா்பில் எம்எல்ஏ லலித் யாதவ் போட்டியிடுகிறாா்.
அதேபோல் ராஜஸ்தானின் பிகானீா் தொகுதியில் மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் போட்டியிடுகிறாா். அவரை எதிா்த்து காங்கிரஸ் முன்னாள் அமைச்சா் கோவிந்த் ராம் மேக்வால் போட்டியிடுகிறாா்.
திரிபுராவில் உள்ள இரு தொகுதிகளில் மேற்கு திரிபுரா தொகுதிக்கு நாளை தோ்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில், பாஜக சாா்பில் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் விப்லவ் குமாா் தேவ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து மாநில காங்கிரஸ் தலைவா் ஆசிஷ்குமாா் சாஹா களத்தில் உள்ளார்.