மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனை - 2நாள் பயணமாக சென்னை வந்தடைந்தார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்காக 2 நாள் பயணமாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் முக்கிய தேர்தல் அதிகாரிகள் சென்னை வருகை தந்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தல் 2024 தொடர்பாக பல்வேறு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் இரண்டு நாள் பயணமாக இன்று இரவு 8 மணிக்கு சென்னை வந்துள்ளார். அவரோடு இந்திய தேர்தல் துணை ஆணையர் நிதேஷ் நியாஸ் மற்றும் தேர்தல் நடத்தும் முக்கிய அதிகாரிகள் வருகை தந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நாளை காலை 11.30 மணிக்கு அரசியல் கட்சியின் பிரதிநிதிகளை சந்தித்து மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து கருத்து கேட்க உள்ளனர். மேலும் மதியம் 1 மணி வரை இந்த கருத்து கேட்பு நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து மதியம் 2 மணிக்கு மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இரவு 8 மணி வரை இந்த கூட்டம் நடைபெறும்.
இதனைத் தொடர்ந்து வரும் 24-ந் தேதி தென் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அமலாக்கத்துறை மற்றும் சுங்கத்துறை, தேர்தல் பிரிவு அதிகாரிகளுடன் இந்த ஆலோசனை நடைபெறுகிறது. அதன் பிறகு தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து தமிழக தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விவரிக்கிறார்.
மீனம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கி இருக்கும் இந்திய தேர்தல் அதிகாரிகளுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழகத் தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தூர் உள்ளிட்டவர்கள் டெல்லியில் இருந்து வந்த தேர்தல் அதிகாரிகளை வரவேற்றனர்.