ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ளூர் வாசிகள் ஆலைய நுழைவு போராட்டம்!
உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் உள்ளூர்
வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தினசரி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல் உள்ளூர் பொதுமக்கள் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய ராமநாதசுவாமி சன்னதியின் வடக்கு புறத்தில் சிறப்பு வழி ஒன்று அமைக்கப்பட்டு
அந்த வழியில் பல ஆண்டுகளாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உள்ளூர் பொதுமக்கள்
பயன்படுத்தும் சிறப்பு வழியை திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அடைத்து விட்டு
வெளியூர் பக்தர்கள் செல்லும் 200 ரூபாய் கட்டண வழியில் கட்டணமின்றி செல்லுமாறு அறிவித்திருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உள்ளூர் பொதுமக்கள் திருக்கோவிலில் உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் உரிமையை திருக்கோயில் நிர்வாகம் பறிப்பதால் உடனடியாக உள்ளூர் பொது மக்கள் செல்லும் சிறப்பு வழியை திறந்து விட வேண்டும் என
கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பொதுமக்களின் இந்த கோரிக்கைக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி
பழனிச்சாமி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் கலோன் தலைமையில் ராமேஸ்வரம் திருக்கோயில் இணை ஆணையர் செல்லத்துறை ராமேஸ்வரம் மக்கள் நல பேரவை குழு இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் இன்று(ஜூன்17) காலை ராமேஸ்வரம் மேற்கு கோபுர வாசல் வழியாக ஆலய நுழைவை போராட்டத்தை ராமேஸ்வரம் மக்கள் நல பேரவை
சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படைநில் இன்று காலை திட்டக்குடியில் இருந்து ராமேஸ்வரம் மேற்கு
கோபுர வாசல் வரை பேரணியாக வந்த பொதுமக்கள் ஆலய நுழைவு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். போராட்டகாரர்களை தடுப்புகள் வைத்து தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும் போராட்டகாரர்களுக்கும்
இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோவில் வாசல் முன் நடுத்தெரு சாலையில் அமர்ந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட மக்களை போலீசார் கைது செய்து தனியார் கல்யாண மண்டபத்தில் அடைத்துனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் திருக்கோயில் நிர்வாகத்திற்கு எதிராகவும், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இதனால் ராமேஸ்வரம் திருக்கோயில் முன்பு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து ஏடிஎஸ்பி சுப்பையா தலைமையில் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.