”தொலைக்காட்சி நேரலை விவாதம்...” - பிரதமர் மோடிக்கு மம்தா சவால்!
மேற்கு வங்கத்தில் இன்று நடந்த நகர எரிவாயு விநியோகத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் முர்ஷிபாத் மற்றும் மால்டா பகுதிகளில் நடந்த வன்முறையை சுட்டிக்காட்டி, அரசாங்கத்தின் இரக்கமற்ற தன்மை என்றும் சமாதானம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு சுதந்திரம் அளித்ததாகவும் மம்தா அரசை கடுமையாக சாடினார்.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “பிரதமர் மோடி இன்று கூறியது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், கேட்க துரதிர்ஷ்டவசமாகவும் இருந்தது. முழு எதிர்க்கட்சியும் உலக அரங்கில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன, நாட்டின் தேசிய நலனைப் பாதுகாக்க அவர்கள் துணிச்சலான நடவடிக்கையை எடுத்துள்ளனர். ஆனால், பிரதமர் மோடியும் அவரது தலைவர்களும் 'ஆபரேஷன் சிந்தூர்' செய்தது போல் 'ஆபரேஷன் பெங்கால்' செய்வோம் என்று சொல்ல வேண்டிய நேரம் இதுதானா?
நமது கட்சி எம்.பி. அபிஷேக் பானர்ஜி சர்வதேச அரங்கில் நாட்டைப் பாதுகாக்கும் வேளையில், பிரதமர் நமது மாநிலத்தை அவதூறு செய்ய வங்காளத்திற்கு வருகிறார். தேச நலனைப் பாதுகாக்க ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று விளக்கமளித்து வரும் நிலையில், மத்திய அரசு 'அரசியல் ஹோலி' விளையாடிக் கொண்டிருக்கிறது.
அரசியல் ஆதாயத்திற்காகவே ஆபரேஷன் சிந்தூர். மோடி வங்காள பெண்களை அவமதித்துவிட்டார். நாங்கள் அனைவரையும் மதிக்கிறோம், ஆனால் எங்கள் சுயமரியாதையை தியாகம் செய்யக்கூடாது. 'ஆபரேஷன் பெங்கால்' என்று அவர் எப்படிச் சொல்லத் துணிந்தார்? அப்படி என்றால் நாளைக்கே தேர்தலை நடத்துங்கள். நாங்கள் தயாராக இருக்கிறோம். நேரடி தொலைக்காட்சி விவாதம் நடத்தட்டும். மேற்கு வங்காளம் vs இந்தியா மற்றும் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க எதிர்க்கட்சிகள் என்ன செய்ய முயற்சிக்கின்றன என்பதைப் பற்றி பேசலாம்” இவ்வாறு அவர் கூறினார்.