புதுச்சேரியில் மதுபானங்கள் விலை ரூ.33 முதல் ரூ. 325 வரை உயர்வு - அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்!
புதுச்சேரியில் நிதி நெருக்கடியை சமாளிக்க மதுபானங்கள் விலை குறைந்தபட்சம் ரூபாய் 33 முதல் அதிகபட்சமாக ரூபாய் 325 வரை அதிரடியாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் அதிரிச்சியடைந்துள்ளனர்
புதுச்சேரியில் கலால் வரி மாற்றியமைக்கப்பட்டுள்ளதால், மதுபானங்கள் மீதான விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்து வகை மதுவகைகளுக்கும் ஒரு லிட்டர் ரூ.85 முதல் ரூ.325 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல் பீர் வகைகள் ரூ.33 முதல் ரூ. 42 வரையும், ஓயின் உள்ளிட்ட மதுபானங்கள் ரூ.50 முதல் 145 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த விலை உயர்வானது உடனடியாக அமல்படுத்தப்படும் என கலால் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கொரோனா நேரத்தில் கூடுதல் வரியாக 25 சதவீதம் மதுபான விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியின் அதிகபட்ச வரி வருவாய் கலால்துறை மூலம் கிடைக்கிறது. இதுபோன்ற சூழலில் கடந்த பட்ஜெட்டில் முதியோர் உள்ளிட்ட உதவித்தொகைகள் உயர்வு, மஞ்சள் அட்டை குடும்ப பெண்களுக்கு ரூ. 1000, சிவப்பு நிற அட்டை குடும்ப தலைவிகளுக்கு ரூ. 2500 உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை செயல்படுத்த நிதி பற்றாக்குறை நிலவுகிறது.
இதனை ஈடுகட்டும் வகையில் அரசானது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது. தற்போது கலால் வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயர்வு மது பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தொழிற்சாலைகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உள்நாடு, அயல்நாடு, சாதாரண பிராண்டுகள், பீரிமீயம் பிராண்டுகள் ஒரு பெட்டிக்கு இவ்வளவு என பல்வேறு நிலைகளில் வரி விதிப்பு இருக்கும். இதன் மூலம் மதுபானங்கள் பிராந்தி, ரம், வோட்கா ஜின், ஒயின் , பீர், விஸ்கி போன்ற மதுபானங்கள் விலை பல்வேறு
நிலைகளில் மாறுபடும்.
ஒரு பாட்டிலுக்கு எவ்வளவு விலை என்பது, கலால்துறை இணையதளத்தில் விரிவாக வெளியாகும். தற்போது கடைகளில் உள்ள பழைய மதுபானங்கள்(பேட்ஜ் எண்) அனைத்தும் விற்று முடித்த பிறகே, உயர்த்தப்பட்ட விலையை கடைக்காரர்கள் வசூலிக்க வேண்டும் என கலால் துறை தெரிவித்துள்ளது.