மதுபான கொள்கை வழக்கு : மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதலமைச்சருமான மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி கைது செய்தது. இதனைத் தொடர்ந்து, அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரை சி.பி.ஐ., அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியே நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு விசாரணை தொடர்பாக மணீஷ் சிசோடியாவுக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் அவர் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது வழக்கு விசாரணைக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை மேலும் 12 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இந்த வழக்கில் சிசோடியாவுக்கு வரும் 18 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.