For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“பவள விழாவை கொள்கை கூட்டணியுடன் கொண்டாடுவோம்” - தொண்டர்களுக்கு முதலமைச்சர் #MKStalin கடிதம்!

07:03 AM Sep 25, 2024 IST | Web Editor
“பவள விழாவை கொள்கை கூட்டணியுடன் கொண்டாடுவோம்”   தொண்டர்களுக்கு முதலமைச்சர்  mkstalin கடிதம்
Advertisement

செப். 28-ம் தேதி காஞ்சியில் திமுக பவள விழா நடைபெறவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில்,

“அண்ணா பிறந்த மண்ணில் பவள விழாவைக் கொள்கைக் கூட்டணியுடன் கொண்டாடுவோம்!முப்பெரும் விழா எனும் திமுக திருவிழாவை அதன் பவள விழா நிறைவாகக் கடந்த செப்டம்பர் 17-ஆம் நாள் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி செயற்கை நுண்ணறிவுத் திறன் மூலம் வாழ்த்து தெரிவித்துத் தொடங்கி வைக்க, நாம் அனைவரும் உற்சாக முழக்கம் எழுப்பி, எழுச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்த நிலையில், இந்தப் பேரியக்கத்தை உருவாக்கிய காஞ்சி மண்ணில் மற்றொரு விழாவுக்கு உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மிகச் சிறப்பான முறையிலே நந்தனத்தில் பவள விழா நிறைவை நடத்தியபோது, அதில் கட்சி முன்னோடிகளுக்குப் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் பெயரிலான விருதுகளுடன், இந்த ஆண்டு முதன்முதலாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ள - முதலமைச்சர் விருதும், காசோலையும் வழங்கிச் சிறப்பிக்கப்பபட்டது. அதுமட்டுமின்றி, கட்சிப் பணியில் சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகளை மண்டலவாரியாகத் தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கினோம். கட்சியின் பொதுச் செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் ஆகியோர் நம் இலட்சியப் பயணம் குறித்தும், இந்த இயக்கத்திற்காகப் பாடுபட்டு விருதுகளைப் பெற்ற இலட்சிய வீரர்கள் குறித்தும் உரையாற்றினார்கள். அதன் பின் கட்சித் தலைவர் என்ற பொறுப்புடன், நான் பவள விழா சிறப்புரையாற்றினேன்.

அண்ணா எந்த லட்சியத்திற்காக இந்த இயக்கத்தைத் தொடங்கினாரோ, கருணாநிதி எத்தனை அரும்பாடுபட்டு இந்த இயக்கத்தைக் கட்டிக்காத்தாரோ அந்த லட்சியத்தை அடைவதற்கும், இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயக நெறிமுகறைகளைக் காப்பதற்கும் தொடர்ந்து தொண்டாற்றி வரும் இயக்கமான திமுக இன்னும் ஒரு நூற்றாண்டு காலத்திற்குத் தன் பயணத்தை வலிவுடன் தொடர்ந்திட நாம் பயணிக்க வேண்டிய பாதையைப் பவளவிழாவில் சுட்டிக்காட்டிப் பேசினேன்.

இதனை எடுத்துச் சொல்ல ஒரு பவள விழா போதாது. திசையெங்கும் விழா எடுக்க வேண்டும். திமுகவுடன் இணைந்து கொள்கைக் கூட்டணி அமைத்துள்ள இயக்கத்தினரையும் இணைத்து விழா எடுக்க வேண்டும் என்பதால்தான் செப்டம்பர் 28-ம் நாள், காஞ்சி மண்ணில் பவள விழா கொண்டாடப்படுகிறது. சென்னை நந்தனம் விழா நம் குடும்ப விழா என்பதால் கட்சியினருக்கு முழுமையான நேரம் ஒதுக்கப்பட்டது. காஞ்சியில் நடப்பது கொள்கை உறவுகளுடனான திருவிழா. இங்கே தோழமைக் கட்சியினர் அனைவரும் பங்கேற்றுச் சிறப்பிக்க இருக்கிறார்கள்.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ., காஞ்சியில் பவள விழாப் பொதுக்கூட்டத்திற்குச் சிறப்பான ஏற்பாடுகளை இரவு - பகல் பாராது மேற்கொண்டு வருகிறார்கள். திமுக பொதுச் செயலாளர், அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெறுகிற பவள விழாவில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., மதிமுக தலைவர் வைகோ எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம். காதர் மொய்தீன், விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி., மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மநீம தலைவர் கமல்ஹாசன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ., தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ., திமுகவுடன் தோழமை உறவு கொண்டுள்ள ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார், எர்ணாவூர் நாராயணன், முருகவேல்ராஜன், தமீமுன் அன்சாரி, அதியமான், திருப்பூர் அல்தாப், பி.என்.அம்மாவாசி உள்ளிட்டோர் திமுக பவள விழாக் கூட்டத்தில் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பிக்க இருக்கிறார்கள். நான் சிறப்புரை ஆற்றவிருக்கிறேன்.

காஞ்சி மண்ணில் நடைபெறும் பவள விழா ஏற்பாடுகள் குறித்து ஒவ்வொரு நாளும் தவறாமல் கேட்டறிந்து வருகிறேன். ‘மக்களிடம் செல்’ என்று அண்ணா சொன்னதைக் கட்டளையாக ஏற்று திமுக அரசு மக்களுக்கான பணிகளைத் தொய்வின்றித் தொடர்ந்து வருகிறது. அதனால் அரசு சார்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்வுகள், ஆய்வுப் பணிகள் எனத் தொடர்ச்சியான செயல்பாடுகளுக்கு ஓய்வில்லை.

அமெரிக்காவிற்கு மேற்கொண்ட பயணத்தின் மூலமாகத் தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ள முதலீடுகள் குறித்தும், அதனால் தமிழ்நாட்டில் ஏற்படவிருக்கும் பரவலான தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்தும், அமெரிக்கா வாழ் தமிழர்கள் பொழிந்த அன்பு மழை குறித்தும் அமெரிக்கப் பயணச் சிறகுகள் என்ற தலைப்பில் நான் கடிதம் எழுதினேன். அந்தப் பயணத்தின் அடுத்த பகுதியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு ஓய்வின்றிப் பணிகள் தொடர்கின்றன. விரைவில் அதனைப் பகிர்ந்து கொள்வேன்.

மாநில உரிமைகளை மறுக்கும் ஒன்றிய அரசுடன் நமக்கான ஒவ்வொரு உரிமைக்காகவும் போராடித்தான் ஆக வேண்டியுள்ளது. போராட்டமே கட்சியின் வலிமை. ஆட்சியதிகாரம் இருந்தாலும் உரிமைக்கான போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். தமிழ்நாட்டின் திட்டங்களுக்கான நிதி கோரி செப்டம்பர் 26, 27 ஆகிய நாட்களில் டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டு பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டுக்கான திட்டங்களை நிறைவேற்றிட தர வேண்டிய நிதியை வலியுறுத்திப் பெறவிருக்கிறேன்.

செப்டம்பர் 28-ம் தேதி காலையில் ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கத்தில் உள்ள தொழிற்பேட்டையில் 9 ஆயிரம் கோடி ரூபாயில், 400 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் டாடா மோட்டார் நிறுவனத்தின் ஜாகுவார், லேண்ட்ரோவர் கார் உற்பத்தித் தொழிற்சாலைக்கு டாடா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சந்திரசேகரன் முன்னிலையில் அடிக்கல் நாட்டவிருக்கிறேன்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் திமுக அரசின் கொள்கைகள் இன்று இந்தியா முழுமைக்கும் வழிகாட்டும் வகையில் அமைந்துள்ள நிலையில், ராணிப்பேட்டை நிகழ்வினை முடித்துக்கொண்டு, காஞ்சிக்கு வருகிறேன். நான் மட்டுமல்ல, உங்கள் அனைவரையும் வாஞ்சையோடு அழைக்கிறது காஞ்சி. அண்ணா பிறந்த மண்ணில் அணிவகுப்போம்! கொள்கைத் தோழமைகளுடன் எழுச்சியுடன் கொண்டாடுவோம் கட்சியின் பவள விழாவை!"

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement