"எதிர்க்கட்சித் தலைவர்கள் எப்போதுமே இனி எதிர்க்கட்சி வரிசையில்தான் இருப்பார்கள்!" - பிரதமர் நரேந்திர மோடி
எதிர்க்கட்சித் தலைவர்கள் எப்போதுமே இனி எதிர்க்கட்சி வரிசையில்தான் இருப்பார்கள் என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மதத்தின் அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்துவதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும். சிறுபான்மையினர் எனக் கூறியும் எதிர்க்கட்சிகள் நாட்டை பிளவுபடுத்துகின்றன. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி நீண்ட நாள்களாகவே எதிர்க்கட்சி வரிசையிலேயே உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள் எப்போதுமே இனி எதிர்க்கட்சி வரிசையில்தான் இருப்பார்கள். ஓர் எதிர்க்கட்சியாகவும் நாட்டு மக்களை அவர்கள் (காங்கிரஸ்) திருப்திப்படுத்தவில்லை.
நாட்டிற்கு ஒரு ஆரோக்கியமான எதிர்க்கட்சி அவசியம் என்று எப்போதுமே நான் சொல்வதுண்டு. பலருக்கு தேர்தலில் போட்டியிடும் தகுதியே இல்லை. சில தொகுதிகளில் பல அதிரடி மாற்றங்களை எதிர்க்கட்சி செய்தது. இந்த முறையும் போட்டியிடும் தொகுதிகள் மாறலாம். மக்களவைக்கு வருவதற்கு பதிலாக பலர் மாநிலங்களவைக்கு செல்லவே விரும்புகின்றனர். காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளால் நாட்டிற்கே பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் இறுதிக்கட்டம் நெருங்கிவிட்டது.
10 ஆண்டுகள் ஆட்சியில், வலுவான பொருளாதாரம் உருவாகியுள்ளது. எங்களின் மூன்றாவது ஆட்சியில் விரைவில் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும். வந்தே பாரத், புதிய நாடாளுமன்றம், சுயசார்பு உற்பத்தி (மேக் இன் இந்தியா) உள்ளிட்டவை எங்கள் அரசின் சாதனைகள். ஒருசிலரின் முக்கியத்துவம் குறைந்துவிடக்கூடாது என்பதற்காக இளைஞர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.