For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

குவைத் தீ விபத்து : உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

10:19 PM Jun 13, 2024 IST | Web Editor
குவைத் தீ விபத்து   உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ  5 லட்சம் நிவாரணம்  – மு க ஸ்டாலின் அறிவிப்பு
Advertisement

குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Advertisement

குவைத் நாட்டின் தெற்கு அஹ்மதி அருகே மங்காஃப் பகுதியில் உள்ள 7 அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வந்தனர்.  இந்நிலையில்  நேற்று அதிகாலை 4 மணியளவில் அக்கட்டடத்தில் திடீரென தீப்பற்றியுள்ளது.  இந்த தீ மளமளவென பரவி கட்டடம் முழுவதும் பரவியது.

இந்த  தீவிபத்தில் தற்போது வரை 43 இந்தியர்கள் உட்பட 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  மேலும் பலர் மாயமாகி உள்ளதாகவும்,  பலியானவர்களில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த பலர் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த தீவிபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நிலையில், உயிரிழந்த 45 பேரின் உடல் நாளை காலை டெல்லி கொண்டு வரப்படுகிறது.

இதையும் படியுங்கள் : “ஒவ்வொரு மாணவரும் இந்தியாவின் தூதுவர்; நாம் ஒன்றிணைந்து அமெரிக்கா-இந்திய உறவை முன்னோக்கிக் கொண்டுசெல்கிறோம்!” – அமெரிக்க தூதர் தூதர் எரிக் கார்செட்டி

இந்நிலையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

"குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில், நேற்றி ஏற்பட்ட தீ விபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீராசாமி மாரியப்பன், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எபமேசன் ராஜு, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த
கிருஷ்ணமூர்த்தி சின்னதுரை, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தன் சிவசங்கர், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த புனாஃப் ரிச்சர்ட் ராய்,  ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த .கருப்பணன் ராமு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஷெரிப் ஆகிய தமிழர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்ற செய்தியை அறிந்து மிகவும்
அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்து வருகிறேன்.

உயிரிழந்தவர்களின் உடல்களை தமிழ்நாட்டிற்கு உடனடியாகக் கொண்டு வருவதற்குக் குவைத் நாட்டிலுள்ள இந்திய தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் இணைந்து, நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அயலகத் தமிழர் நலத்துறைக்கு உரிய அறிவுரைகளை வழங்கியுள்ளேன். அதன் பயனாக, உயிரிழந்த ஏழு தமிழர்களின் உடல்களும், தனிவிமானத்தின் மூலம் இந்தியாவிற்குக் கொண்டுவர விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியாவை வந்தடையும், தமிழர்களின் உடல்களை உடனடியாகத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்து, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இது மட்டுமல்லாமல் இந்த தீவிபத்தில் காயமடைந்து, குவைத் நாட்டிலேயே, சிகிச்சை பெற்று வரும் தமிழர்கள் தொடர்பான விவரங்களைத் திரட்டிடுமாறு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறைக்கு நான் அறிவுரை வழங்கியதையொட்டி, உரிய நடவடிக்கைகளை அத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : “ஒவ்வொரு மாணவரும் இந்தியாவின் தூதுவர்; நாம் ஒன்றிணைந்து அமெரிக்கா-இந்திய உறவை முன்னோக்கிக் கொண்டுசெல்கிறோம்!” – அமெரிக்க தூதர் தூதர் எரிக் கார்செட்டி

சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து குணமடைய தேவையான உதவிகளை குவைத் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து அயலகத் தமிழர் நலத்துறை துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குவைத் நாட்டில் பணிபுரிந்து வரும் தமிழர்கள் அங்கு கொடிய தீவிபத்திற்கு ஆளானதுடன் உயிர்களை இழந்தும் தீக்காயங்களுக்குச் சிகிச்சைகள் பெற்றும் வரும் நிலையை எண்ணி, வேதனையில் ஆழ்ந்துள்ள  தமிழ்நாட்டு மக்களுக்கு, தமிழ்நாடு அரசு எல்லா உதவிகளையும் வழங்கிடத் தயாராக இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இந்த விபத்து தொடர்பான விவரங்களை அறிந்து கொள்வதற்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு இந்தியாவிற்குள் கேட்டுக் கொள்கிறேன். தொடர்பு கொள்வதற்கு உரிய தொலைபேசி எண். +91 1800 309 3793 அதே போன்று குவைத் நாட்டில் தொடர்பு கொள்வதற்கு உரிய தொலைபேசி +91 80 6900 9900, +91 80 6900 9901. வாயிலாகவும் அயலகத் தமிழர் நலத்துறையைத் தொடர்பு கொண்டு தேவைப்படும் தகவல்களைப் பெற்றிடுமாறும் கேட்டுக் கொள்கிறேன்"

இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags :
Advertisement