கொடநாடு கொலை கொள்ளை வழக்கு - இபிஎஸ், சசிகலாவிடம் விசாரணை நடத்த அனுமதி!
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவில் ஓம் பஹதூர் என்ற பாதுகாவலர் கொலை செய்யப்பட்டு, ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக சோலுர்மட்டம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதிக்கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதியளித்ததுடன், மற்றவர்களை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்தனர்.
அதில் ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின் நடந்த கொள்ளையில், கொடநாடு எஸ்டேட்டில் இருந்து காணாமல் போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசிக்கு தான் தெரியும் எனவும், புலன் விசாரணை குழு, வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை எனவும் முக்கிய குற்றவாளிகளை தப்ப விட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவுக்கு தொடர்பு இருப்பது அனைவருக்கும் தெரியும் என வாதிட்டார். மேலும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்ததால் குற்றம் சாட்டப்பட்டவர், நீதிமன்ற நடைமுறையை தவறாக பயன்படுத்தி சம்பந்தமில்லாமல் முதலமைச்சருக்கு சம்மன் அனுப்ப கேட்க முடியாது என நீலகிரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வினோத்குமார், கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் வழக்கு தொடர்பாக மேல் விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார். இதையடுத்து, தற்போது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இல்லையே, எதிர் தரப்பு சாட்சியாக ஏன் விசாரிக்க கூடாது என கருத்து தெரிவித்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி கீழ் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து, எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்ட அனைவரையும் எதிர் தரப்பு சாட்சிகளாக விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.