மீண்டும் மத்திய அமைச்சராகிறார் கிஷண் ரெட்டி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கலாச்சாரம், சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த கிஷன் ரெட்டிக்கு மீண்டும் மத்திய அமைச்சரவையில் இடம் வழஙகப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியானது. 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றன. இதனையடுத்து இன்று பிரதமராக மோடி பதவியேற்கவுள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து, பிரதமர் பதவி ஏற்க நரேந்திர மோடி உரிமை கோரியதை அடுத்து அவர் இன்று பதவியேற்பை நடத்தி வைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இன்று மாலை நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
மேலும் கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், லாலன் சிங், பிரதாப் ராவ் ஜாதவ், தெலுங்கு தேசம் கட்சியின் எம்பிக்களான ராம் மோகன் நாயுடு, பெம்மாசானி சந்திரசேகர், எல்ஜேபி கட்சியின் சிராக் பஸ்வான், ஆர்ஜேடியின் ஜெயந்த் சவுத்ரி, ஏஜேஎஸ்யூ கட்சியின் சந்திரசேகர் சவுத்ரி, உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்த கிஷண் ரெட்டி இந்த முறையும் மத்திய அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கேபினெட் செயலாளாரான ராஜிவ் கௌபா கிஷண் ரெட்டிக்கு மத்திய அமைச்சராக பதவியேற்க அழைப்பு விடுத்து அதிகாரப்பூர்வ கடிதத்தை அனுப்பியுள்ளார்.