சிறையிலிருந்தபடியே 2-வது உத்தரவை பிறப்பித்த கெஜ்ரிவால்!
மக்களின் நலவாழ்விற்காக அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும் எனவும், மருத்துவமனையில் மருந்துகள் கையிருப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் சுகாதார துறை அமைச்சருக்கு கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடியே உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார்.
இதற்கிடையில் 12 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர், கடந்த மார்ச் 21-ம் தேதி கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கெஜ்ரிவாலை கைது செய்தனர். தொடர்ந்து கெஜ்ரிவால், மார்ச் 22-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தற்போது அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கெஜ்ரிவால் சிறையிலிருந்து உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். முன்னதாக தண்ணீர் பற்றாக்குறை தீர்க்க தனது முதல் உத்தரவை பிறப்பித்தார். இந்நிலையில் இன்று இரண்டாவது உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில், ‘கோடை காலம் வருவதால் டெல்லி மக்களின் நல்வாழ்விற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் சுகாதார துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜ் ஈடுபட வேண்டும் எனவும், பொது மக்களுக்காக செயல்படும் மகல்லா மருத்துவமனைகளில் போதுமான அளவுக்கு மருந்துகள் கையிருப்பு இருப்பதை உறுதி செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார்.