“ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை கருணாநிதியே விரும்பினார்” - அண்ணாமலை பேட்டி!
“ஒரே நாடு ஒரே தேர்தல் வரத்தான் போகிறது. அதற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியே விருப்பப்பட்டார். அவர் மேலே இருந்து பிரதமர் மோடிக்கு ஆசிர்வாதம் செய்வார்” என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை ஜிபி ரெசிடென்சி பகுதியில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
“களத்தில் யார் போட்டியாளர்களாக இருக்கிறார்களோ அவர் மீதான தவறை மக்கள் மன்றத்தில் வைத்துவிட்டு செல்கிறார் மோடி. இபிஎஸ் வீதியில் வந்தால் பார்ப்பதற்கு மக்கள் இல்லை. வண்டியில் வைத்து ஏற்றி இறக்கி, பட்டியில் வைத்து அடைத்து 500 பேருக்கு ஒரு சூப்பர்வைசர் போட்டு இப்படித்தான் அரசியல் கட்சி கூட்டங்கள் நடக்கிறது. வீதிக்கு வந்து சாமானிய பொதுமக்கள் தங்கள் நேரத்தை கொடுத்து மோடியை பார்க்க வருகிறார்கள்.
பாஜக ஆட்சிக்கு வந்துவிடும் என 60 ஆண்டுகளாக ஒரு கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை உருவாக்கியுள்லனர். உதயநிதி நடித்த மாமன்னன் படத்தில் கெட்டவர்கள் எல்லாம் வடக்கில் இருப்பார்கள். நல்லவர்கள் எல்லாம் தெற்கில் இருப்பார்கள். இதேபோன்று அரைத்த மாவை அரைத்துக் கொண்டிருக்கிறார்கள். 2024 தேர்தலுக்குப் பிறகு அப்படி ஒரு பிம்பம் தமிழ்நாட்டில் இருக்காது. சினிமாவின் மீது கோபம் இல்லை.
தமிழ்நாட்டில் ஊடகம் சுதந்திரமாக இல்லை. ஊழல் யுனிவர்சிட்டியில் வேந்தராக மோடி இருக்க வேண்டும் என்றால் அந்த பல்கலைக்கழகத்தின் பெயரே ஸ்டாலின் கனவு வைக்க வேண்டும். ஸ்டாலின் யுனிவர்சிட்டி வேந்தராக நாங்கள் இருக்கிறோம். 2026 இல் இவர்களின் கூட்டத்தை அடக்கி ஓட விட வேண்டும். அரசியலில் எனக்கு நண்பர்கள் கிடையாது.
பண அரசியலை கோவையில் இருந்து ஒழிக்க வேண்டும். ஜூன் 4-ம் தேதி பண அரசியல் என்ற பேய் கோவையில் இருந்து ஓட்டப்படும். விஜய் ஆண்டனி போன்றவர்கள் சமூக அக்கறையில் பேச வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் வரத்தான் போகிறது. அதற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியே விருப்பப்பட்டார். அவர் மேலே இருந்து மோடிக்கு ஆசிர்வாதம் செய்வார். முதலாவதாக நான் ஓட்டுக்கு பணம் தரப் போவதில்லை அதிகாரிகள் தங்கள் கடமையை செய்ய வேண்டும். அவர்களது வேலையை கட்சிக்காரர்கள் செய்ய மாட்டார்கள்”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.