கர்நாடகா நிலச்சரிவு | கேரளாவைச் சேர்ந்தவரின் நிலை என்ன?
கர்நாடகாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், கேரளாவைச் சேர்ந்த ஒருவரை மீட்க இரவு பகல் பாராமல் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தென் மாநிலங்களில் தொடர் கனமழை நீடித்து வருகிறது. இந்த சூழலில் கர்நாடக மாநிலம் ஷிரூர் அருகே கடந்த 10 நாட்களுக்கு முன் கங்க வள்ளி ஆற்றின் கரையோரம் நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நிலச்சரிவில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி இழுத்து செல்லப்பட்டது.
அந்த பகுதியில் டீ கடை நடத்தி வந்த தம்பதியினர், அவர்களுடைய இரண்டு குழந்தைகள், தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஓட்டுநர், நடத்துனர், மற்றும் கேரள கோழிக்கோடு மாவட்டதை சேர்ந்த ஓட்டுநர் அர்ஜுன் ஆகிய 7 பேர் இந்த நிலச்சரிவில் சிக்கினர். இதில் சிக்கிய 6 பேரின் உடல்களை மீட்பு படையினர் மீட்டனர். அதில் டாரஸ் வாகனத்துடன் நிலச்சரிவில் சிக்கிய கேரளாவைச் சேர்ந்த அர்ஜுனை மட்டும் இன்னும் மீட்கவில்லை. கேரளாவைச் சேர்ந்த அர்ஜுன் உடலை மீட்கும் பணிகள் தொய்வு ஏற்ப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் கேரள மக்களுக்கு தெரிய வர மீட்பு பணியில் தொய்வை உணர்ந்த கேரள ஊடகங்கள் 10 நாட்களுக்கும் மேலாக இரவு பகல் பாராமல் களத்தில் இறங்கி செய்திகளை கொடுத்து ஒட்டு மொத்த மக்களையும் கர்நாடகா பக்கம் திருப்பியுள்ளனர். நிலச்சரிவில் சிக்கிய அர்ஜுனுக்காக கேரள மக்கள் கண்ணீர் மல்க பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.