For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கங்கனாவை அறைந்த குல்விந்தர் கவுர் ராகுல் காந்தியுடன் இருப்பதாக பரவும் படம் - உண்மை என்ன?

08:36 AM Jun 15, 2024 IST | Web Editor
கங்கனாவை அறைந்த குல்விந்தர் கவுர் ராகுல் காந்தியுடன் இருப்பதாக பரவும் படம்    உண்மை என்ன
Advertisement

This news Fact checked by Newschecker

Advertisement

கங்கனாவை அறைந்த CISF காவலர் குல்விந்தர் கவுர் ராகுல் காந்தியுடனும், சோனியாகாந்தியுடனும் நிற்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதன் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் செக்கர் ஆய்வு செய்தது. இது குறித்து விரிவாக காணலாம்.

கங்கனாவை அறைந்த CISF காவலர்

தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மண்டி தொகுதியின் பாஜக எம்பியும், நடிகையுமான கங்கனா ரனாவத் சண்டிகர் விமான நிலையத்துக்கு சென்றார்.   அங்கு பாதுகாப்பு சோதனைக்கு பிறகு கங்கனாவுக்கும்,  அங்கிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை பெண் அதிகாரி குல்விந்தர் கவுர்-க்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது.

அப்போது திடீரென அந்த அதிகாரி,  கங்கனாவின் கன்னத்தில் அறைந்துள்ளார்.  இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை கங்கனா தீவிரவாதிகள் என விமர்சித்ததற்காக இந்த தாக்குதலை அவர் நடத்தியதாக கூறப்பட்டது. அந்த பெண் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன், கைது நடவடிக்கையும் அவர் மீது மேற்கொள்ளப்பட்டது.

குல்விந்தர் கவுருடன் ராகுல் காந்தி - பரவும் போலி படம்

கங்கனாவை அறைந்த CISF காவலர் குல்விந்தர் கவுர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியுடன் நிற்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ”இவள்தான் குல்விந்தர் கவுர். இவள்தான் கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்தவள்.. இப்போது தெரிகிறதா யார் மூலகாரணம் என்று” என்று இந்த புகைப்படம் வைரலாகிறது.

இதே கேப்சனுடன் அதிகளவில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய  நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தது.

உண்மை சரிபார்ப்பு

கங்கனாவை அறைந்த CISF காவலர் குல்விந்தர் கவுர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸாருடன் நிற்பதாகப் பரவும் புகைப்படச்செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த பிப்ரவரி 14, 2024 அன்று ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏவான திவ்யா மதர்னா, “Welcomed Mr. Rahul Gandhi and Mrs. Priyanka Gandhi who came along. Priyanka Gandhi Vadra Rahul Gandhi” என்று இப்புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்திருப்பதை நம்மால் காண முடிந்தது.

மேலும் திவ்யா மதர்னா ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் சோனியாகாந்தியுடன் இருக்கும் இப்புகைப்படத்தை எடுத்தே தற்போது கங்கனா கன்னத்தில் அறைந்த CISF வீரர் குல்விந்தர் கவுர் என்று பரப்பி வருகின்றனர் என்பது நமக்குத் தெளிவாகியது.

மேலும், திவ்யா தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில், “  பாஜக ஐடி பிரிவினர் தங்களின் வக்கிரமான மனநிலையை வெளிப்படுத்த ஒரு கணமும் தவறுவதில்லை.   சோனியா காந்தியுடன் நான் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, என்னை CISF ஜவான் குல்விந்த்ரா கவுர் என்று பரப்பி வருகின்றனர்” என குறிப்பிட்டு தனது புகைப்படம் போலியாக பரவி வருகிறது என்று விளக்கமளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவு

கங்கனாவை அறைந்த CISF காவலர் குல்விந்தர் கவுர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸாருடன் நிற்பதாகப் பரவும் புகைப்படச்செய்தி போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

Note : This story was originally published by Newschecker and Republished by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.
Tags :
Advertisement