கந்துவட்டி விவகாரம் | புகார் அளித்த நபரை தரக்குறைவாக பேசிய காவல் ஆய்வாளர்.. அடுத்து நடந்த அதிர்ச்சி!
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பேரளம் அருகே உள்ள சிறுபுலியூர்
கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்காரவேலு (48). இவர் பூங்காவூரில் வெல்டிங் பட்டறை
நடத்தி வருகிறார். இவர் தலையூர் கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியம் என்பவரிடம்
கடந்த ஜனவரி மாதம் 60 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு பணம் வாங்கினார். அதில் 35 ஆயிரம் ரூபாய் செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. மீதி தொகை செலுத்த சிங்காரவேலு கால அவகாசம் கேட்டார்.
இந்த நிலையில் கடந்த ஜூன் 30-ஆம் தேதி வெல்டிங் பட்டறையில் சிங்காரவேலு
பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுது சுப்பிரமணியம் அவருடைய மகன், பேரன்கள் உள்ளிட்ட 8 நபர்கள் சிங்காரவேலுவை கடுமையாக தாக்கினர். இதையடுத்து சிங்காரவேலு பேரளம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு பேரளம் காவல் ஆய்வாளர் சுகுணா சிங்காரவேலுவை காவல் நிலையத்திற்கு அழைத்து, கொடுத்த புகாரை வாபஸ் வாங்க சொல்லி தரக்குறைவாக பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மணமுடைந்த சிங்காரவேலு இன்று அதிகாலை மண்ணெண்ணெய் ஊற்றி உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றார்.
தற்போது அவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். கந்து வட்டி கொடுமை காரணமாக நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக அளித்த புகாரை வாபஸ் பெற சொல்லி மிரட்டிய காவல் ஆய்வாளர் மீதும் கந்து வட்டி வட்டிக்கு விட்டு தாக்குதல் நடத்திய சுப்பிரமணியன் என்பவர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.