"கமல்ஹாசன் எதிர்காலத்தில் கவனத்துடன் பேச வேண்டும்" - மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி!
கோவை விமான நிலையத்தில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசியவர்,
"பெங்களூருவில் நடைபெற்ற துயர சம்பவம் மிகவும் வேதனைக்குரியது. விளையாட்டை விளையாட்டாக தான் பார்க்க வேண்டும் என தெரிவித்தார். காலம் கடந்து அவர்களுக்கு கிடைத்திருக்கக் கூடிய வெற்றியை கொண்டாடுகின்ற போது கட்டுப்பாடு இல்லாமல் போனதன் விளைவாகத்தான் பத்து உயிர்களை நாம் இழந்து இருக்கிறோம். அனைத்து இடத்திலும் பொறுமை காப்பது அவசியம் என்பதை இந்த துயர நிகழ்வு நமக்கு உணர்த்தி உள்ளது.
அரசு ஒரு துயர சம்பவம் நடந்த பிறகு எதிர்காலத்தில் இது போன்று ஒரு துயரம் நடக்காமல் இருப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து தான் ஆக வேண்டும். மேலும் அணி நிர்வாகம் தான் பாதுகாப்பு குறித்து கேட்டிருக்க வேண்டும். கமல்ஹாசன் பொது வாழ்க்கையில் இருக்கின்றவர், அரசியலுக்கு மட்டும் ஒரு பகுதி பொது வாழ்க்கை அல்ல, திரைப்படங்களில் நடிக்கும்போது கூட பொதுமனிதராகத்தான் இருக்கிறார். பேசுகின்ற போது கவனத்துடன் பேச வேண்டும். சமஸ்கிருத மொழியில் இருந்து தான் தமிழ் மொழி வந்தது என்று கூறினால் தமிழகம் கொந்தளிக்காதா?
தேவையற்றதை பேசுவதை பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். யாருடைய மனதையும் புண்படுத்துகின்ற உரிமை பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு கிடையாது என தெரிவித்தார். கமல்ஹாசன் எதிர்காலத்தில் கவனத்துடன் பேச வேண்டும் என கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
ஏற்கனவே காவிரி நீர் பிரச்சனை இரண்டு மாநிலங்களுக்கு இடையே இருந்து வரும் நிலையில் தேவையற்ற கொந்தளிப்புகள் இருப்பதாகவும் அந்த கொந்தளிப்பு தணிந்திருக்க கூடிய நேரத்தில் இன்னொரு கொந்தளிப்பை இது உருவாக்கி இருக்கிறது, இதெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் எந்த ஷா வந்தாலும் காலூன்ற முடியாது என்று முதல்வர் பேசியது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், அவர் அரசியலை பேசியிருக்கிறார், அதற்குரிய பதிலை அரசியல்வாதியாக இருப்பவர்களிடம் தான் கேட்க வேண்டும், ஆளுநர் இதற்கு என்ன பதில் சொல்ல வேண்டும்? ஆனால் ஜனநாயகம் என்பது
அனைவருக்கும் வாய்ப்புகளை மாற்றி மாற்றி தருவது என்று நான் கருதுகிறேன். கன்னடத்து நடிகர்கள் யாரும் எதுவும் கூறவில்லை, ஆனால் கமலஹாசன் தான் மொழி பற்றி பேசியதாகவும் சுட்டிக்காட்டிய அவர் கொந்தளிக்க கூடிய விஷயங்களை நாம் பேசக்கூடாது என்பதுதான் எங்களுடைய கருத்து.
அந்தந்த மாநிலங்களில் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதுதான் புதிய கல்விக் கொள்கை. ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கக்கூடிய மொழிகளுக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும், ஒவ்வொரு மாநிலத்தின் தாய் மொழிக்கும் மதிப்பளிக்கிறார்கள். அதே சமயத்தில் மற்றவர்களின் தாய் மொழியை பழிக்கும் உரிமை கிடையாது என தெரிவித்தார். முதலமைச்சர் 10 ஆண்டு காலத்திற்கும் மேல் மத்தியில் ஆட்சியில் இருந்தார்கள், அவர் அப்பொழுதெல்லாம் தமிழுக்கு என்ன செய்திருக்கிறார் இப்பொழுது தமிழுக்கு எதிராக யார் எதனை செய்திருக்கிறார்கள் என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் கல்வி தரம் உயர வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. அதிகமான கல்வி நிலையங்கள் இருக்கின்ற நேரத்தில் கல்வி பரவலாக்கப்பட்டிருந்தாலும் கல்வியின் தரம் உயர வேண்டும் என கூறினார். இன்னும் ஐஏஎஸ் தேர்வுகளை கண்டு பயப்படக்கூடியவர்களாக தமிழர்கள் இருக்கக் கூடாது, எந்த தேர்வையும் எதிர்கொள்கின்ற அளவிற்கு கல்வியின் தரம் உயர வேண்டும்.
யுபிஎஸ்சி தேர்வுகள் தமிழர்களுடைய எதிர்காலத்திற்கும் தமிழகத்தின் எதிர்காலத்திற்கும் தமிழகத்திற்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதற்கும் உதவும். அவர் யுபிஎஸ்சி தேர்வுகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக்கொண்டார். தேர்வுகளை கண்டு பயப்படுகின்ற மாணவர்களை நாம் உருவாக்க கூடாது தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களை நாம் உருவாக்க வேண்டும் அதுதான் எதிர்காலத்திற்கு நல்லது என தெரிவித்துள்ளார்.