கள்ளக்குறிச்சி விஷச்சாரய வழக்கு - சிபிசிஐடி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
கள்ளக்குறிச்சியில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் விஷச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து ஆட்சியர் ஷ்ரவன்குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா உள்ளிட்ட அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பின்பு தமிழ்நாடு அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கிருக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் சின்னதுரை மற்றும் ஷாகுல் ஹமீது உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்பு அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து அண்மையில் 18 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சின்னதுரை மற்றும் ஷாகுல் ஹமீது ஆகிய இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், அவர்கள் தாக்கல் செய்த மனு இன்று (ஜன.17) சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், குண்டர் சட்டத்தில் இருவரையும் சிறையில் அடைத்துப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், கைது காரணமாக அவர்களின் குடும்ப பெயர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.
மேலும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் வாதிட்டார். வாதங்களை கேட்ட நீதிபதி, இவர்களின் மனுவுக்கு ஜனவரி 23 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி சிபிசிஐடி க்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளி வைத்தார்.