”பிளவுவாத அரசியல் இல்லாதவர் நீதிபதி சுதர்சன் ரெட்டி”- கனிமொழி பேட்டி!
இந்தியாவின் துணை குடியரசு தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் உடல் நிலை பிரச்சனை காராணமாக கடந்த ஜூலை 21 தேதி திடீரென பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையமானது துணை குடியரசு தலைவர் பதவி தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது. அதன்படி புதிய துணை குடியரசு தலைவரை தேர்வு செய்ய செப்டம்பர் 9ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இதனிடையே துணை குடியரசு தலைவர் பதவிக்கு ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக களம் காண்கிறார். இதனை தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாக வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இன்று இந்தியா கூட்டணி எம்பிக்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அச்சந்திப்பில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக அறிவித்தார்.
இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி ”இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக நிறுத்துவது என்று ஒருமித்த கருத்தாக முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. இது ஒரு கருத்தியல் ரீதியான ஒரு போட்டியாகும்.
ஆர்எஸ்எஸ் பின்புறத்தில் இருந்து வந்த ஒருவரை தற்போது பாஜக வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது. அவர் ஒரு தமிழராக இருந்தாலும் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார். தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக என்ன செய்தார் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பிளவுவாத அரசியல் இல்லாத ஒரு நபரை தேர்ந்தெடுத்து இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்தியுள்ளோம்.
நீதிபதி சுதர்சன் ரெட்டி பல்வேறு விவகாரங்களில் ஏழை மக்கள், நலிவடைந்தோர் நலன்சார்ந்து பல தீர்ப்பு வழங்கியிருக்கிறார். அதன் அடிப்படையில் தான் தற்போது அவரை வேட்பாளராக தேர்வு செய்துள்ளோம்.
துணை குடியரசுத் தலைவர் தேர்வின் இறுதி பட்டியலில் யார் யார் இருந்தார்கள் என்பது முக்கியமல்ல. மாறாக இறுதியாக ஒருமித்த கருத்தாக சுதர்சன் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் இதுவே இறுதியானது.” என்று தெரிவித்தார்.