ஜம்மு-காஷ்மீர் தாக்குதல் - பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இரண்டு பேர் கைது!
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான 'தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்' பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, தாக்குதல் தொடர்பாக என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், தாக்குதல் நடைபெற்றபோது சம்பவ இடத்தில் இருந்தவர்கள், தாக்குதலில் இருந்து உயிர் தப்பியவர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து உதவியதாக 2 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பஹல்காமின் பட்கோலே பகுதியை சேர்ந்த பர்வேஸ் அகமது மற்றும் ஹில்பார்க் பகுதியை சேர்ந்த பஷீர் அகமது ஜோதார் ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட இருவரும் பஹல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு உணவு, இருப்பிடம், போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்துள்ளனர் என்று உறுதி செய்துள்ளனர்.