“தாய்மொழியைப் பேணிக் கொண்டே, இந்தி கற்றுக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்” - ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!
புதிய தேசிய கல்விக் கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்கிறது என தமிழ்நாடு அரசு அந்த கொள்கையை எதிர்த்து வருகிறது. இது இந்திய அளவில் அரசியலில் பேசுபொருளாகியுள்ள நிலையில், அண்மையில் ஆந்திர மாநில துணை முதலமைச்சரும் ஜனசேனா கட்சி தலைவருனா பவன் கல்யாண் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து தமிழ்நாடு அரசு அரசியலுக்காக புதிய தேசிய கல்விக் கொள்கை எதிர்க்கிறது என கருத்து தெரிவித்தார்.
இந்த நிலையில் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அம்மாநில சட்டமன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, “மொழி என்பது தொடர்புக்கு பயன்படுத்தப்படும் ஒரு ஊடகம் மட்டுமே ஆங்கிலத்திலிருந்துதான் அறிவு வருகிறது என்ற தவறான கருத்து உள்ளது. ஆனால், அறிவு என்பது ஒரு மொழியிலிருந்து மட்டும் வருவதில்லை. உலகில் எங்கு பார்த்தாலும், தங்கள் தாய்மொழியில் படித்தவர்களே அதிகம் சிறந்து விளங்குகிறார்கள். ஏனென்றால், எந்தப் பாடத்தையும் தாய்மொழியில் கற்றுக்கொள்வதுதான் எளிது.
மொழியை வெறுக்காதீர்கள். தாய்மொழியைப் பேணிக் கொண்டே அனைத்து மொழிகளையும் கற்க வேண்டும். டெல்லியில் பேசுவதற்கு இந்தி கற்றுக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும். இந்தியாவில் ஜப்பானிய மற்றும் ஜெர்மன் மொழிகளைக் கற்றுக்கொண்டால், அங்கு செல்பவர்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கும்”
இவ்வாறு ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.