“எச்சில் துப்பியதுதான் காரணம்” - மூன்றரை வயது சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை குறித்து மாவட்ட ஆட்சியர் சர்ச்சை பேச்சு!
மயிலாடுதுறையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில்
போக்சோ சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு காவல்துறையினருக்கு அறிவுரைகளை வழங்கி பேசினர்.
நிகழ்ச்சியில், சீர்காழியில் கடந்த 24-ஆம் தேதி அங்கன்வாடிக்கு சென்ற மூன்றரை வயது சிறுமி, 16 வயது சிறார் குற்றவாளியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தலை மற்றும் கண் சிதைக்கப்பட்ட சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பேசினார்.
அப்போது “கடந்த வாரம் நடந்த மூன்றரை வயது சிறுமியின் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், குழந்தையே தவறாக நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு கிடைத்த தகவலின்படி காலையில் அந்த குழந்தை சிறுவனின் முகத்தில் எச்சில் துப்பியுள்ளது. அதுதான் காரணம். எனவே, இரண்டு தரப்பிலும் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இதுபோன்ற விஷயங்களை பெற்றோர் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும்” என பேசியுள்ளார்.
மூன்றரை வயது சிறுமி சிறுவனின் முகத்தில் எச்சில் துப்பியதுதான் பாலியல் வன்கொடுமைக்கு காரணம் என மாவட்ட ஆட்சியர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.