குலசேகரப்பட்டினத்தில் இருந்து வருடத்துக்கு 25 ராக்கெட்கள் ஏவத் திட்டம் - இஸ்ரோ தலைவர் நாராயணன்!
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு ஆந்திரா மாவட்டம்
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில்
ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. அங்குதான் இந்தியாவின் செயற்கைக் கோள்கள் மற்றும் பல்வேறு உலக நாடுகளின் செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளன.
தற்போது நாட்டின் இரண்டாவது ஏவுதளத்தை அமைக்கும் பணியில் இஸ்ரோ
ஈடுபட்டிருக்கிறது. அதற்காக அவர்கள் தேர்வு செய்த இடம், தமிழகத்தின்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம்.
கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டுக்கு வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தத் திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். இதற்கிடையில் கடந்த ஆறு மாத காலமாக ராக்கெட் ஏவுதளம் அமைக்க உள்ள இடத்தில் உள்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கலந்துகொண்டு ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டினார். அவருடன் இஸ்ரோ விஞ்ஞானிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து, இஸ்ரோ தலைவர் நாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
”இந்திய விண்வெளி நாளில் மிக முக்கிய நாள். ராக்கெட் லாஞ்ச் செய்யப்படும் இடம் மற்றும் கட்டுமான பணிகள் இன்று 100 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும். இதற்கான இடம் வழங்கிய தமிழக அரசுக்கும் தமிழக முதல்வருக்கும் நன்றி.
இங்கிருந்து வரும் மூன்று மாத காலத்திற்குள் ஒரு சிறிய ரக ராக்கெட் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இங்கிருந்து ஏவப்பட உள்ள ராக்கெட் சிறிய அளவிலான ராக்கெட் என்று நினைக்க வேண்டாம். 500 கிலோ எடை கொண்ட ராக்கெட் விண்ணில் ஏவப்படும். இஸ்ரோவின் பணி கூட்டு முயற்சி. 20 பணியாளர்கள் இதற்கு பின்னால் உள்ளார்கள். தனியார் ராக்கெட்டுகளும் இங்கிருந்து ஏவப்படும். அடுத்த ஆண்டு டிசம்பருக்கு அனைத்து பணிகளும் நிறைவடையும். குலசேகரப்பட்டினம் இந்திய வரைபடத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இங்கிருந்து வருடத்துக்கு 25 ராக்கெட் வரை ஏவ திட்டமிடப்பட்டுள்ளது”
என்று தெரிவித்தார்.