பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது ஆப்கானிஸ்தான் அதிரடி தாக்குதல்!
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகின்றது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வரும் தலிபான்கள் இருநாட்டு எல்லையில் கிளை அமைப்பை தொடங்கி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியது.
மேலும் தெஹ்ரீக் இ தலிபான் என்ற அமைப்பு பாகிஸ்தானில் தாக்குதல் நடத்துவதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த பயங்கரவாத அமைப்பை அழிப்பதாக கூறி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் பாகிஸ்தான் விமானப்படை கடந்த சில நாட்களுக்கு முன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான்கள் அரசு கண்டனம் தெரிவித்தது. மேலும் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் மீது தலிபான்கள் நேற்று இரவு அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில், ஆப்கானிஸ்தானின் எல்லையோர மாகாணங்களான குனர், ஹெல்மண்ட், பக்டியா ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பாகிஸ்தான் ராணுவ நிலைகள், சோதனைச்சாவடிகள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், எல்லையில் உள்ள பாகிஸ்தான் சோதனைச் சாவடிகளையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 2 நாட்டின் எல்லைக் கோட்டின் குறுக்கே 2 பாகிஸ்தானிய நிலைகள் தாக்கி அழிக்கப் பட்டுள்ளதாகவும் 12 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், பல வீரர்கள் காயம் அடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையேயான இந்த தாக்குதல் சம்பவம் இரு நாட்டிற்கும் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.