உணவுக்காக காத்திருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இஸ்ரேல் - 38 பேர் உயிரிழப்பு!
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபரில் போர் தொடங்கியது. 1 வருடத்தை தாண்டியும் நீடித்து வந்த இந்த போரை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் தலையீட்டால் நடப்பாண்டு ஜனவரியில் போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் இரு நாடுகளில் உள்ள பணயக்கைதிகளை விடுவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு மூன்று கட்டங்களாக திட்டமிடப்பட்டது.
இஸ்ரேல், ஹமாஸ் இடையே சில வாரங்களாக போர் நிறுத்தம் அமலில் இருந்தது. இதனிடையே, போர் நிறுத்தத்தின் 2ம் கட்டத்தை அமல்படுத்த ஹமாஸ் வலியுறுத்தி வந்தது. 2ம் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தப்படி காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேற வேண்டும். ஆனால், முதற்கட்ட ஒப்பந்தத்தை நீட்டித்து மேலும் சில பணய கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்ய வேண்டுமென இஸ்ரேல் வலியுறுத்தி வந்தது.
இதனால், இரு தரப்புக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஒப்பந்தத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல மத்தியஸ்தம் செய்த நாடுகள் முயற்சித்தன. ஆனால், இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கவில்லை. இதனால், ஒப்பந்தத்தை முறித்த இஸ்ரேல், கடந்த மார்ச் 18ம் தேதி காசா மீது தாக்குதல்களை தொடங்கியது.
காசா முனையில் பெரும்பாலான பகுதிகள் இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த நிலையில், அங்கு இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியில் அமைந்துள்ள உணவு விநியோக மையத்தில் உணவு பெற ஏராளமான பாலஸ்தீனர்கள் இன்று (ஜூன் 16) அதிகாலையில் திரண்டனர். இதனால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களைக் கட்டுப்படுத்த இஸ்ரேல் ராணுவம் அதிகாலை 4 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 38 பேர் உயிரிழந்ததாக தெரிகிறது. இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பிலிருந்து எந்தவொரு விளக்கமும் தரப்படவில்லை.