For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கொட்டும் மழையில் விநாயகர் கோயில் இடிக்கப்படுவதாக வைரலாகி வரும் பதிவு உண்மையா?

03:16 PM Jun 05, 2024 IST | Web Editor
கொட்டும் மழையில் விநாயகர் கோயில் இடிக்கப்படுவதாக வைரலாகி வரும் பதிவு உண்மையா
Advertisement

This news fact checked by Newsmeter

Advertisement

விநாயகர் கோயில் ஒன்று கொட்டும் மழையிலும் இடிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது.  இந்த பதிவு தவறானது மற்றும் தவறாக வழி நடத்தக்கூடியது என கண்டறியப்பட்டது.

"கொட்டும் மழையிலும் விநாயகர் கோயில் இடிப்பு... நீங்க ஆட்சி வந்து கோயில்களை இடிச்சது தாண்டா உங்க சாதனை என்ற தலைப்புடன் கள்ளக்குறிச்சி காந்தி சாலை அருகே உள்ள கோயில் ஒன்று இடிக்கப்படும் காணொலி காட்சி ஒன்று வலதுசாரியினரால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு இதனை இடிப்பது போன்று கூறி பகிரப்பட்டு வருகிறது.

உண்மை சரிபார்ப்பு:

இதன் உண்மை தன்மையை கண்டறிய இது குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது ஜூன் 02-ம் தேதி நக்கீரன் ஊடகம் இது தொடர்பான செய்தியை வெளியிட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதில், கள்ளக்குறிச்சி நகர் காந்தி சாலையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய ஏரியில் இருந்து காந்திரோடு வழியாக தென்கீரனூர் ஏரிக்கு தண்ணீர் செல்லும் வகையில் பாசன வாய்க்கால் உள்ளது. இதனை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. கடந்த 2020-ம் ஆண்டு ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அப்போது, ஆக்கிரமிப்பை அகற்ற தடை விதிக்க சிலர் வழக்கு தொடர்ந்தனர். இடைக்கால தடை விதிக்கப்பட்டதால் இடிப்பதை அதிகாரிகள் நிறுத்தினர்.

தொடர்ந்து, ஆக்கிரமிப்பை அகற்ற தடை கோரிய வழக்கினை தள்ளுபடி செய்து 6 வாரத்திற்குள் வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ‘ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு நீங்களே ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ளுங்கள், நாங்கள் அகற்றினால் அதற்கான செலவுத் தொகையை உங்களிடம் வசூலிப்போம்’ என நீர்வளத்துறை சார்பில் கடந்த மே 16-ம் தேதி நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து, ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் தாமாகவே கட்டடங்களை இடித்து அகற்றினர்.

அகற்றாத கட்டங்களை கடந்த மே 28-ம் தேதி பொதுப்பணித்துறை சார்பில் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. மேலும் காந்தி சாலையில் உள்ள சக்தி விநாயகர் கோயில் மற்றும் தர்ம சாஸ்தா கோயிலை அகற்றுவது தொடர்பாக கோயிலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஜீன் 1-ம் தேதி பலத்த காவல்துறை பாதுகாப்புடன் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள பாசன அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் கோயில்களை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்" என்று குறிப்பிட்டுள்ளது. 

நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயில்கள் உள்ளிட்ட 36 கட்டடங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டதாக ஜுன் 2-ம் தேதியன்று தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக நகராட்சி பொறியாளரிடம் கேட்டபோது நீதிமன்ற உத்தரவின் பேரில் குடிநீர் விநியோகத்தை நிறுத்தியதாகவும் அதனை தொடர்ந்து ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் இடிக்கப்பட்டதாகவும் கூறினார்.

மேலும், பத்திரிக்கையாளர் ராஜ பிரியன் கூறுகையில், “சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட பல்வேறு ஆக்கிரமிப்புகளும் கோயிலுடன் சேர்த்து அகற்றப்பட்டது. இது தமிழ்நாடு அரசின் நடவடிக்கை என்று கூறி இந்து முன்னணி பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் பேராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், இது முழுவதும் நீதிமன்ற உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை. மேலும் ஆகம விதிகளின்படியே கோயிலில் இருந்த சிலைகளும் அகற்றப்பட்டது” என்று தெரிவித்தார்.

முடிவு:

தேடலின் முடிவாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே கள்ளக்குறிச்சி மாவட்டம் காந்தி சாலையில் உள்ள விநாயகர் கோயில் உள்பட 36 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது. மேலும் கோயில் மட்டும் தனியாக இருக்கப்பட்டது போன்று வலதுசாரியினர் தவறாக பரப்பி வருகின்றனர் என கண்டறியப்பட்டது.

Note : This story was originally published by Newsmeter and Republished by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement