‘டெல்லி நிலநடுக்கத்தில் இடிந்துவிழுந்த கட்டிடங்கள்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
This News Fact Checked by ‘India Today’
டெல்லி-என்சிஆரில் உள்ள மக்கள் பிப்ரவரி 17-ம் தேதி காலை 4.0 ரிக்டர் அளவிலான பலத்த நிலநடுக்கங்களுடன் விழித்தெழுந்தனர். நிலநடுக்கத்தின் மையம் டெல்லியின் தௌலா குவானில் இருந்தது. சில மணி நேரம் கழித்து, அதே அளவிலான மற்றொரு நிலநடுக்கம் பீகாரையும் தாக்கியது.
பகுதியளவு இடிந்து விழுந்த பல மாடி கட்டிடங்களின் இரண்டு படங்கள் இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. டெல்லி பூகம்பத்தின் விளைவுகளை அவை காட்டுவதாகக் கூறப்படுகிறது. இந்தப் படங்கள் Facebook, Instagram மற்றும் ட்விட்டரில் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன.
இரண்டு படங்களும் பழையவை என்றும், டெல்லி-என்.சி.ஆரில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் இதுகுறித்த உண்மைச் சரிபார்ப்பில் கண்டறியப்பட்டுள்ளது.
உண்மை சரிபார்ப்பு:
இதுகுறித்த தலைகீழ் படத் தேடலின் உதவியுடன், நவம்பர் 9, 2015 அன்று வெளியிடப்பட்ட இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி அறிக்கையில் ஒரு புகைப்படம் கிடைத்தது. 2015 அக்டோபரில் ஏற்பட்ட பூகம்பத்திற்குப் பிறகு, டெல்லியின் சஃப்தர்ஜங் என்க்ளேவில் உள்ள ஒரு அங்கீகரிக்கப்படாத காலனியில் உள்ள 4 மாடி கட்டிடம் பகுதியளவு இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் கட்டிடத்திற்கு ஏற்பட்ட கடுமையான சேதத்தால், அதில் இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறினர். உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
2021-ம் ஆண்டு வெளியான ஒரு பேஸ்புக் பதிவில் மற்றொரு படம் கிடைத்தது. பூகம்பங்கள் தொடர்பான பல கட்டுரைகளிலும் இந்தப் புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்ற புகைப்படம், துருக்கிய பத்திரிகையான கார்னுகோபியாவில் வெளியான ஒரு கட்டுரையிலும் பயன்படுத்தப்பட்டது. அந்தக் கட்டுரை, ஆகஸ்ட் 17, 1999 அன்று வடமேற்கு துருக்கியைத் தாக்கி குறைந்தது 17,000 பேரைக் கொன்ற நிலநடுக்கத்தைப் பற்றியது.
அந்தப் படம் துருக்கியிலிருந்து வந்தது என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றாலும், அது பழையது என்பது தெளிவாகிறது.
சமீபத்திய டெல்லி நிலநடுக்கத்திற்குப் பிறகு உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சில தகவல்களின்படி, தௌலா குவானில் உள்ள ஜீல் பூங்காவில் 20-25 ஆண்டுகள் பழமையான மரம் வேரோடு சாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.