குடியரசு தினத்தன்று பிரதமர் மோடியுடன் தோனி, சச்சின் எடுத்த புகைப்படம் என வைரலாகும் பதிவு உண்மையா?
This News Fact Checked by ‘Vishvas News’
ஜன. 26 ஆம் தேதி நடைபெற்ற குடியரசு தினநிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தோனி மற்றும் சச்சின் ஆகியோரின் படம் குறித்து பரப்பப்படும் வைரல் கூற்று தவறானது. உண்மையில் இந்த வைரல் படம் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் வீரர்கள் மகேந்திர சிங் தோனி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. ஜனவரி 26 அன்று செங்கோட்டையில் நடைபெற்ற அணிவகுப்பின் போது எடுக்கப்பட்டதாகக் கூறி இந்தப் படம் பகிரப்பட்டு வருகிறது.
இதுகுறித்த விசாரணையில், இந்த வைரல் கூற்று தவறானது எனவும், இந்த வைரல் படம் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்டது எனவும் கண்டறியப்பட்டது.
வைரல் பதிவு:
வைரலாகும் புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்ட ஃபேஸ்புக் பயனர் அஞ்சலி சவுகான், “நரேந்திர மோடி, எம்.எஸ்.தோனி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் செங்கோட்டையில் இருந்து ஜனவரி 26-ம் தேதி அணிவகுப்பைப் பார்க்கும் புகைப்படம்” என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார்.
பதிவின் காப்பக இணைப்பை இங்கே காணலாம்.
உண்மை சரிபார்ப்பு:
வைரலான பதிவின் உண்மையைக் கண்டறிய, இதுதொடர்புடைய முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடப்பட்டது. ஆனால் பதிவு தொடர்பான எந்த நம்பகமான ஊடக அறிக்கையும் கிடைக்கவில்லை. மேலும், கூகுலிள் படத்தைப் பயன்படுத்தி தேடியதில், பதிவு தொடர்பான எந்த தகவலும் கண்டுபிடிக்கப்படவில்லை.
படத்தை கவனமாகப் பார்த்தபோது, படத்தில் பல குறைபாடுகள் இருப்பது தெரியவந்தது. மகேந்திர சிங் தோனி மற்றும் சச்சின் டெண்டுல்கரின் கண்கள் சரியாக இல்லை. அதே நேரத்தில் பிரதமர் மோடியின் கட்டைவிரலின் வடிவம் சரியாக இல்லை.
தொடர்ந்து, AI புகைப்படம் சரிபார்க்கும் கருவிகளைப் பயன்படுத்தி ஆராய்ந்ததில், ஹைவ் மாடரேஷன் கருவி புகைப்படம் AI-ஆல் உருவாக்கப்படுவதற்கான 98% நிகழ்தகவைக் காட்டியது.
அதேபோல், DCopy உதவியுடன் புகைப்படத்தை ஆராய்ந்ததில், இந்த கருவி புகைப்படம் AI உருவாக்கப்படுவதற்கான 92% நிகழ்தகவை காட்டியது.
AI திட்டங்களில் பணிபுரியும் AI நிபுணர் அன்ஷ் மெஹ்ராவை தொடர்பு கொண்டபோது, AI கருவிகளின் உதவியுடன் இந்தப் படம் உருவாக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி நாட்டில் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாட்டில் ஒரு பெரிய கொண்டாட்டம் நடத்தப்படுகிறது. முதலில், நாட்டின் குடியரசுத் தலைவர் கடமைப் பாதையில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைப்பார். பின்னர் அணிவகுப்பு நடத்தப்படும். ஆகஸ்ட் 15 ஆம் தேதி அதாவது சுதந்திர தினத்தன்று, பிரதமர் செங்கோட்டையில் கொடியை ஏற்றுவார்.
இறுதியாக, தவறான கூற்றுடன் புகைப்படத்தைப் பகிர்ந்த பயனரின் கணக்கை ஸ்கேன் செய்ததில், அந்தப் பயனருக்கு நான்காயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்கள் இருப்பது தெரியவந்தது.
முடிவு:
ஜனவரி 26 நிகழ்ச்சியின் பிரதமர் மோடி, தோனி மற்றும் சச்சின் ஆகியோரின் படம் குறித்து வைரலாகும் கூற்று தவறானது என உண்மை சரிபார்ப்பில் கண்டறியப்பட்டது. உண்மையில் இந்த வைரலான படம் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.
Note : This story was originally published by ‘Vishvas News’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.