"எய்ம்ஸ் மருத்துவமனை என்ன விண்வெளி ஆராய்ச்சி மையமா?" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப் பயணமாக சேலம் மாவட்டத்திற்கு நேற்று (ஜுன் 11) வருகை தந்தார். அவருக்கு ஈரோடு – சேலம் மாவட்ட எல்லையான பெரும்பள்ளத்தில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து சுமார் 11 கிலோமீட்டர் தூரத்திற்கு ரோடு ஷோ நடத்தினார். பின்னர், மேட்டூரில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர், நேற்று இரவு மேட்டூரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜுன் 12) காலை டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார். தொடர்ந்து சேலம் இரும்பாலை அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டார். அங்கு முதமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1,500 கோடியில் நலத்திட்ட உதவிகள், கட்டி முடிக்கப்பட்ட திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் சிறப்புரையாற்றினார்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
"நெல் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும். நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500-க்கு கொள்முதல் செய்யப்படும். நெல் கொள்முதல் விலை உயர்வால் 10 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறுவார்கள். திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ சேலத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும். மத்திய அரசு அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை என்ன நிலையில் உள்ளது? திமுக ஆட்சிக்கு வந்த நான்காண்டுகளில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், உலக தரத்திலான ஜல்லிக்கட்டு அரங்கம், கீழடி அருங்காட்சியகம் உள்ளிட்ட ஏராளமான பணிகளை திமுக ஆட்சி முடிந்துள்ளது. இதுதான் பாஜக மாடலுக்கும் திமுக மாடலுக்கு உள்ள உள்ள வித்தியாசம்.
கடந்த 10 ஆண்டுகளாக கட்டுவதற்கு எய்ம்ஸ் மருத்துவமனை என்ன விண்வெளி ஆராய்ச்சி மையமா? முறையாக நிதி ஒதுக்கி இருந்தால் இரண்டே ஆண்டுகளில் கட்டி இருக்கலாம். மூன்றாவது முறையாக மத்திய அரசு ஆட்சி அமைந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு என்று செய்த ஒரு சிறப்பு திட்டத்தையாவது மத்திய அரசு கூறட்டம. ஒன்பது ஆண்டுகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திமுக இடம் பெற்றிருந்தது. அதன் சாதனைகள் எல்லாம் சட்டமன்றத்தில் பட்டியலிட்டு கூறியுள்ளேன்.
மத்திய அரசு ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகள் ஆகிறது. தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார்கள்? சொன்னால் செய்து காட்டும் ஆட்சியாக திமுக ஆட்சி செயல்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி பகுதியில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாடு கழிவுநீர் கால்வாய்கள் சிறு பாலங்கள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள தினசரி சந்தையில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். தலைவாசல் பகுதியில் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் இலுப்பநத்தம் கிராமத்தில் வேளாண் விற்பனை நிலையம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.
மேட்டூர், நரசிங்கபுரம் புதிய பகுதியில் நகராட்சி அலுவலகம் கட்டப்படும். சங்ககிரி நகராட்சியில் புதிய வணிக வளாகம் அமைக்கப்படும். தாரமங்கலம் நகராட்சியில் ரூ.18 கோடி மதிப்பீட்டிலும், எடப்பாடி நகராட்சியில் ரூ. 9 கோடி மதிப்பீட்டிலும், ஆத்தூர் நகராட்சியில் ரூ. 5 கோடி மதிப்பீட்டிலும் புதிய குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
தூரத்தில் உள்ள இலக்குகளையும் விரைவாக அடையக்கூடிய பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் திமுக ஆட்சியில் பயன் பெற்றவர்களின் புள்ளி விவரங்களை நெஞ்சின் நிமித்தி சொல்ல முடியும். பிரதமர் பேரில் தரும் திட்டத்துக்கு மாநில அரசு 50% நிதி தருகிறது. மத்திய அரசு திட்டங்களுக்கும் மாநில அரசு நிதி கொடுத்து வருகிறது. படையப்பா படத்தைப்போல் "மாப்பிள்ளை அவர் தான்; சட்டை என்னுடையது" என மத்திய அரசு செயல்படுகிறது. நாம் நிதியை மடைமாற்றுவதாக எந்த அடிப்படையில் அமித்ஷா குற்றம்சாட்டுகிறார்?"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.