“இன்னும் முடிவெடுக்கல!” - பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவிற்கு செல்வது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் பதில் அளித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 29ம் தேதி ஆன்மிக பயணமாக இமயமலை சென்றார். பின்னர் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.
இந்நிலையில், இமயமலை பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (05.06.2024) தமிழகம் திருப்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது:
எனது நண்பர் மதிப்பிற்குரிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். அதோடு, எனது நண்பர் சந்திரபாபு நாயுடு ஆந்திரா பிரதேசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளார். அவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்தியில் என் டி ஏ மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கப் போகிறது, மூன்றாவது
முறையாக மதிப்புக்குரிய பிரதமர் மோடி பதவி ஏற்க உள்ளார். அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள். இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
இதனை தொடர்ந்து, பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இன்னும் அதைப் பற்றி முடிவெடுக்கவில்லை என ரஜினிகாந்த் பதில் அளித்தார். இதனையடுத்து, ஆன்மீகப் பயணம் குறித்த கேள்விக்கு ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு புதிய இடத்திற்கு செல்வது ஒரு புது புது அனுபவம் என பதில் அளித்தார்.