டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதிலும் முறைகேடு - அமலாக்கத்துறை புதிய தகவல்!
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் பல பார்களை டெண்டர் எடுத்த நபர், அதனை அரசாங்கத்திற்கு தெரியாமல் பல நபர்களுக்கு சப்-காண்ட்ராக் விட்டிருப்பதும், அதன் மூலம் மதுபான வகைகளை அதிக அளவில் கூடுதல் விலைக்கு விற்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, பார் அமைப்பதற்கு டாஸ்மாக் அருகேயுள்ள கட்டடத்தின் உரிமையாளர்களிடம் NOC வாங்குவதிலும் முறைகேடு செய்யப்பட்டு டெண்டர் எடுக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு இடங்களில் லைசன்ஸ் இல்லாத பார்கள் செயல்பட்டு வருவதும், அந்த பார்களுக்கு அருகிலுள்ள டாஸ்மாக்கிலிருந்து மது விற்பனை நடந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மாவட்ட டாஸ்மாக் அலுவலர்கள், அரசியல் பிரமுகர்களால் லைசென்ஸ் இல்லாத பார்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், அதுகுறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இத்தகைய முறைகேடுகள் அதிக அளவில் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் பல நூறு கோடி ரூபாய் முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
குறிப்பாக டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகன், டாஸ்மாக் நிறுவன பொது மேலாளர் ஜோதி சங்கர், மேலாளர் சங்கீதா உள்ளிட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல். மேலும், இவர்களிடம் 13 மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் குறித்த விவரங்களை நான்கு தினங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டதற்கு பிறகு தற்போது வரை 33 நபர்களுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அளித்துள்ளனர். இதில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் பார் டெண்டர் முறைகேடு தொடர்பாக, பார் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள், டெண்டருக்காக DD எடுக்க பயன்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி நம்பர் உரிமையாளர்கள், மாவட்ட டாஸ்மாக் அலுவலர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்மன் அளிக்கப்பட்ட நபர்களிடம் நடத்தப்படும் விசாரணையின் முடிவில் டாஸ்மாக் முறைகேடு மட்டுமல்லாமல், டாஸ்மாக்கை மையமாக வைத்து நடந்த "பார் டெண்டர் முறைகேடும்" மிகப்பெரிய அளவில் வெளிவரும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.