சர்வதேச யோகா தினம் - பிரதமர் மோடி வாழ்த்து!
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் 11வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாப்படுகிறது. இதையொட்டி 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்' என்ற கருப்பொருளில் உலகில் உள்ள 191 நாடுகளில் யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்தியாவிலும் அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பெருந்திரளாக பங்கேற்கும் வகையில் யோகா பயிற்சிக்கான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
இதையொட்டி, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தபோதிலும், விசாகப்பட்டினத்தில் கின்னஸ் சாதனை நிகழ்ச்சியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக துறைமுக நகரான ஆர்.கே. கடற்கரையில் இருந்து போகபுரம் வரை உள்ள 26 கி.மீ. நீள நடைபாதை தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.
இந்த யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தார். மேலும் ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலரும்யோகாசனத்தில் கலந்து கொண்டனர். இதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சிக்காக 1,200-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், டிரோன்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.