ஆபரேஷன் சிந்தூர் குறித்து வீடியோ வெளியிட்ட இன்ஸ்டா பிரபலம் கைது!
புனே சட்டக் கல்லூரி மாணவி ஷர்மிஸ்தா பனோலி இன்ஸ்டாகிராம் மூலம் பிரபமானவர். இவர் அண்மையில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலளித்த ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் குறித்த கருத்துகளை தெரிவித்ததோடு பாலிவுட் நடிகர்கள் இதுகுறித்து மெளனமாக இருக்கின்றனர் என்று விமர்சித்தார்.
அவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி பலரிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. மேலும் பலர் அப்பெண்ணை ட்ரோல் செய்யத் தொடங்கியதுடன் மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து சர்ச்சைக்குரிய அந்த பதிவை நீக்கிய அப்பெண் தனது எக்ஸ் பதிவில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
இருப்பினும் அவர் மீது கொல்கத்தாவில் வகுப்புவாத கருத்துகளை கூறியதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவரது வீட்டிற்கு காவல்துறையினர் விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்பினர். இதையடுத்து அப்பெண் தலைமறைவானதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நோட்டீஸ் அனுப்பி எந்தவித பதிலும் வராததாக காவல்துறை தரப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய, அவருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் ஷர்மிஸ்தா பனோலி காவல்துறையினாரால் குருகிராமில் கைது செய்யப்பட்டார்.