ரயிலில் திடீரென விழுந்த நடு பெர்த்... பயணி உயிரிழப்பு! காரணம் என்ன தெரியுமா?
ரயிலில் நடு பெர்த் திடீரென விழுந்ததில் பயணி பலியான சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
நாட்டில் தினமும் ரயில் விபத்துகள் பற்றிய செய்திகள் வெளிவருகின்றன. ஆனால் இந்த முறை ஒரு ஆச்சரியமான செய்தி வெளியாகியுள்ளது. எர்ணாகுளம்-ஹஸ்ரத் நிஜாமுதீன் மில்லினியம் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (12645) ஸ்லீப்பர் கோச்சில் கேரள மாநிலம் மாரஞ்சேரியைச் சேர்ந்த 62 வயதான அலி கான் என்பவர் பயணம் செய்தார். தெலங்கானா மாநிலம் வாரங்கல் என்ற இடத்திற்கு ரயில் சென்று கொண்டிருந்த போது, நடு பெர்த்தில் கழன்று திடீரென விழுந்தது. இதனால் கீழ் பர்த்தில் படுத்திருந்த அலிகான் பலத்த காயம் அடைந்தார். கடந்த செவ்வாய்கிழமை இரவு டெல்லி பயணத்தின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த விபத்தில், அவரது கழுத்தில் மூன்று எலும்புகள் உடைந்தன, பலத்த காயமடைந்த கான் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அலிகான் மறைவுக்குப் பிறகு, கேரள காங்கிரஸ், மத்திய அரசையும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவையும் விமர்சித்தது. இது குறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள பதிவில், உங்களுக்கு இருக்கை கிடைத்தாலும், ரயில் விபத்து, பெர்த் விபத்து அல்லது சுகாதாரமின்மை போன்றவற்றால் நீங்களும் இறக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், கேரள காங்கிரஸின் இந்த குற்றச்சாட்டை, ரயில்வே அமைச்சகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரயில்வே அமைச்சகம், “மோசமான இருக்கை காரணமாக விபத்து நடக்கவில்லை. விசாரணையில், மேல் பெர்த்தில் அமர்ந்திருந்த நபர் சங்கிலியை சரியாக பொருத்தாததால் பெர்த் விழுந்தது. சீட் பிரச்னை இல்லை” என தெரிவித்துள்ளது.
எனினும், இந்த சம்பவம் ரயில்வேயின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், பாதுகாப்பு குறித்து கவலைகள் பயணிகளின் மத்தியில் எழுந்துள்ளன.