வகுப்புகளை புறக்கணித்தால் இந்திய மாணவர்களின் விசா ரத்து செய்யப்படும் - அமெரிக்கா எச்சரிக்கை!
அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக சுமார் 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். மேலும் பல்வேறு வெளிநாட்டை சேர்ந்தவர்களும் அமெரிக்காவில் தங்கி படித்து வருகின்றனர். இதனிடையே, அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின் அவர்களின் பல்வேறு உரிமைகள், சலுகைகள் பறிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்கள் உட்பட வெளிநாட்டு மாணவர்கள் அனைவரும் உரிய தகவல் கொடுக்காமல் இடைநின்றால், மாணவர் விசா ரத்து செய்யப்படும் என்று அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தினால், வகுப்புகளை புறக்கணித்தால், அல்லது உங்கள் கல்லூரிக்கு தெரிவிக்காமல் நீங்கள் இடைநின்றால், உங்கள் மாணவர் விசா ரத்து செய்யப்படும்.
மேலும், நடவடிக்கைக்கு உள்ளாகும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் எப்போதும் விசா வழங்கப்படாது. ஆகவே எந்தவொரு பிரச்சினையையும் தவிர்க்க எப்போதும் உங்கள் விசாவின் விதிமுறைகளைப் பின்பற்றி உங்கள் படிப்பை தொடருங்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.