"தமிழ் மொழியை ஒருபோதும் இந்தியால் அழிக்க முடியாது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் !
தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அக்கட்சியின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,
"நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மொழிப் போராட்ட வரலாற்றுப் பின்னணியின் மூன்றாவது மடல்.
இந்தியைப் படித்தால் தமிழ் அழிந்துவிடும் என்று திமுக பயப்படுகிறதா எனக் கேட்கின்ற ஓரு கூட்டத்தார் இன்று, நேற்றல்ல, பெரியார் முன்னெடுத்த 1937-39 மொழிப் போராட்டத்தின் போதும் இருந்தனர். இதே கேள்வியை அப்போதும் கேட்டனர். இந்தி என்பது ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்பாக, சமஸ்கிருதமும் மேலும் சில மொழிகளும் கலந்து திரிபடைந்ததால் உருவான மொழி. தமிழ், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான மொழி. தன்னிலிருந்து திராவிடக் குடும்பத்து மொழிகளைக் கிளைத்திடச் செய்த தாய்மொழி.
கீழடி அகழாய்வுகள் மூலம் ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ் எழுத்துகளைக் கண்டறிந்திருக்கிறோம். மாங்குளம், மயிலாடும்பாறை, ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகிய இடங்களில் நடந்த அகழாய்வுகளில் கிடைத்த இரும்புப் பொருட்களை நவீன அறிவியல் தொழில்நுட்பமான கதிரியக்கக் கரிம காலக் கணிப்புகள் மற்றும் தூண்டொளி காலக் கணிப்புகளுக்கு உட்படுத்தியதன் விளைவாக, தமிழர்கள் 5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத் திறன் பெற்றிருந்தனர் என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
‘கல்தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த குடி’ என்பதற்கிணங்க, சங்க இலக்கியம் காட்டும் குறிப்புகள் பலவும் சான்றுகளுடன் நிரூபிக்கப்படுகின்ற அளவிற்குத் தமிழ் மூத்த மொழியாக-செம்மொழியாகத் திகழ்கிறது. சிறப்புமிக்க தமிழ் மொழியை இந்தி மொழியாலோ, இந்தியை முன்னிறுத்தி மறைமுகமாகத் திணிக்க நினைக்கும் சமஸ்கிருதத்தாலோ ஒருபோதும் அழிக்க முடியாது.
பிறகு எதற்காக அவற்றை நாம் எதிர்க்கிறோம்? அதற்கான காரணத்தைத் தந்தை பெரியார் அன்றே சொன்னார். “இந்தியால் தமிழ் அழியாது. ஆனால், தமிழ்ப் பண்பாடு அழிந்து போகும். இன்று வேலைக்காரியாக வரும் இந்தி, நாளை தமிழ் நாட்டரசி ஆவது நிச்சயம்” என்று எச்சரித்தார். ஓர் இனத்தை அழிக்க வேண்டுமென்றால் அதன் மொழி மீது தாக்குதல் நடத்தி, பண்பாட்டை சிதைக்க வேண்டும் என்பதை பாசிச எண்ணம் கொண்டோர் கடைப்பிடித்தார்கள்.
அண்மையில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் இந்தியா மீதான முந்தைய படையெடுப்புகள் குறித்துப் பேசியபோது, “ஒரு மாநிலத்தைக் கைப்பற்ற வேண்டுமென்றால், அதன் கலாச்சாரத்தை கையிலெடுப்பதும், மொழியை அழிப்பதுமே சிறந்த வழி” என்று குறிப்பிட்டதை மறக்க முடியாது. மத்திய பாஜக அரசின் கொள்கையே அதுவாகத்தான் இருக்கிறது.
தமிழர்களின் கலாச்சாரத்தை- தனித்துவமானப் பண்பாட்டைச் சிதைக்கும் நோக்கத்துடன் பன்னெடுங்காலமாக இனப் பகைவர்கள் நடத்திய படையெடுப்பை இந்த மண் தொடர்ந்து முறியடித்து வந்திருக்கிறது. இந்த நெடிய தமிழ்ப் பண்பாட்டு மரபின் தொடர்ச்சிதான் திராவிட இயக்கம்.
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், கங்கை கரை வரை படைநடத்தி கனக - விசய மன்னர்களை வென்று கண்ணகிக்கு கல் எடுத்து வந்து கோட்டம் அமைத்த சேரன் செங்குட்டுவன் என மூவேந்தர்கள் காலத்தில் மட்டுமல்லாமல், பக்தி இலக்கியங்களைப் பரப்பிய நாயன்மார்கள், ஆழ்வார்கள், மெய்யியல் போற்றிய சித்தர்கள், சமரச சுத்த சன்மார்க்க நெறியை வழங்கிய அருட் பிரகாச வள்ளலார் உள்ளிட்டோர் சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்து, தமிழை ஆயுதமாகக் கொண்டு பண்பாட்டுப் படையடுப்பைத் தடுத்தனர்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலான திராவிட இயக்கம் ஆதிக்க மொழியின் படையெடுப்பை முறியடித்து, தமிழைப் பாதுகாக்கும் அரணாகத் திகழ்கிறது.
தமிழ் தனித்து இயங்கும் தன்மை கொண்ட செம்மொழி என்பதும் இந்தியாவின் பிற மொழிகள் போல வடமொழி ஆதிக்கத்தால் சிதைவுறாமல் என்றும் நிலைத்திருக்கும் மொழி என்பதும் இந்திய ஒன்றியத்தை ஆட்சி செய்பவர்களின் கண்களை உறுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ் எனும் கோட்டைக்குள் ஓட்டை போட்டு நுழைய நினைக்கும் இந்தி - சமஸ்கிருதத் திணிப்பை அன்று முதல் இன்று வரை தடுத்து விரட்டும் காவலர்களகத் திராவிட இயக்கத்தினர் திகழ்கின்றனர்.
ஆதிக்கத்தை உணர முடியாமல் போனவர்களின் தாய்மொழிகள் கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் கரைந்து காணாமல் போன துயர வரலாற்றை, இந்தி
பரவிய நிலப்பரப் பெங்கும் காண முடியும்.
இந்தி மொழியை ஏற்றுக்கொண்ட பீகார் மாநில மக்களின் சொந்த மொழியான மைத்திலி, அந்த மாநிலத்தின் அடுத்தடுத்த தலைமுறையினர் அறிய முடியாதபடி வழக்கொழிந்தது. அண்மைக் காலமாகத்தான் மைத்திலி மொழி பேசும் மக்கள் மெல்ல விழிப் புணர்வு பெற்று, தாய்மொழியை மீட்டெ டுப்பதற்கான
நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். இந்தியாவின் பெரிய மாநிலம் உத்தரபிரதேசம். இந்திதான் அந்த மாநிலத்தின் தாய்மொழி எனப் பலரும் நினைப்போம். உண்மை அதுவல்ல.
வடமேற்கு உத்தரபிரதேச மக்களின் மொழி பிரஜ்பாஷா, தென்மேற்கு உத்தர பிரதேசத்தின் தாய்மொழி புந்தேல்கண்டி. வடகிழக்கு உத்தரபிரதேசத்தின் சொந்த மொழி போஜ்புரி. மத்திய உத்தரபிரதேசத்தின் உள்பகுதி களில் பேசப்பட்டு வந்த மொழி ஆவ்தி. அத்துடன், கண்ணோஜி என்ற மொழியும் இப்பகுதியில் வழக்கில் இருந்தது. உத்தரபிரதேசத்தில் இருந்து பிரிக்கப்பட்ட மாநிலமான உத்தரகாண்டில் வாழும் மக்களின் பூர்வீக மொழி கடுவாலி மற்றும் குமோனி.
மண்ணின் மைந்தர்களுடைய மொழிகள் அனைத்தையும் இந்தி என்கிற ஆதிக்க மொழியின் படையெடுப்பு சிதைத்துவிட்டது. போஜ்புரி, ஆவ்தி போன்ற மொழிகள் பெரும் அவதிகளுக்கிடையே இப்போதுதான் மெல்லத் துளிர்க்கின்றன.
இவை மட்டுமா? ஹரியாண்வி, ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி, மால்வி, நிமதி, பகேலி, ஜார்கன்ஷி, சந்த்தலி, சட்டீஸ்கரி, கோர்பா உள்ளிட்ட மொழிகள் பேசுவோரைத் தேட வேண்டியுள்ளது. உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், சட்டீஸ்கர், ஹரியானா, ராஜஸ்தான் என இந்தியை ஆட்சிமொழியாகக் கொண்ட மாநிலங்களின் பூர்வீக மொழிகள் சிதைக்கப்பட்டு, அழிக்கப்பட்ட நிலையில், அந்த மொழி பேசும் மக்களின் பண்பாட்டு விழுமியங்களும், இலக்கியச் செழுமைகளும், மரபார்ந்த அறிவுத்திறனும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருக்கின்றன.
வடஇந்திய மாநிலங்களில் 25க்கும் மேற்பட்ட அந்தந்த மண்ணின் தாய்மொழிகளை கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் இந்தி, சமஸ்கிருதம் எனும் ஆதிக்க மொழிகளின் படையெடுப்பு சிதைத்திருக்கிறது. நூற்றாண்டைக் கடந்த திராவிட இயக்கம் ஏற்படுத்திய விழிப்புணர்வினாலும், அதன் தொடர்ச்சியானப் போராட்டத்தினாலும் நம்தாய்த் தமிழ் மொழி காப்பாற்றப்பட்டு, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகள் நிலைநிறுத்தப் பட்டிருக்கின்றன.
இதனை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் மத்திய பாஜக அரசின் தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி, சமஸ்கிருத மொழிகளைத் திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதனை உணர்ந்திருப்பதால் தான் தமிழ்நாடு எதிர்க்கிறது.
என்றும் தமிழைக் காத்து நிற்கும் திமுக தமிழ்நாட்டில் உள்ள பல கட்சிகளும் இணைந்து இந்தித் திணிப்பை எதிர்க்கின்றன. கழகத்தை அரசியல் களத்தில் எப்போதும் எதிர்க்கும் கட்சிகளும் கூட இந்தித் திணிப்பு கூடாது என்கின்றன". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.