For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#IndependenceDay - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கும் விருதுகள்!

08:25 AM Aug 15, 2024 IST | Web Editor
 independenceday   முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கும் விருதுகள்
Advertisement

சுதந்திர தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் வழங்கும் விருதுகள் குறித்து இங்கு காண்போம். 

Advertisement

நல்லாளுமையில் சிறந்த பயன் எய்திட பணியாற்றியவர்கள், வெற்றிகரமாக புதிய உத்திகள், புதிய முயற்சிகள் மற்றும் சிறந்த வழிமுறைகளை செயல்படுத்தியதன் வாயிலாக பொதுமக்களுக்கு சிறந்த சேவை கிடைக்க சக பணியாளர்களை வழிநடத்துவோர், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களுக்கு முறையாக கிடைக்க பணிபுரிந்தோருக்கு ஆண்டுதோறும் நல்லாளுமைக்கான விருது சுதந்திர தினத்தன்று முதலமைச்சரால் வழங்கப்படுகிறது. குறிப்பாக அரசு ஊழியர்கள், தனிநபர்கள், ஒரு குழு அல்லது அமைப்பு, நிறுவனம், அலுவலகம் என்ற அடிப்படையில் 3 பிரிவுகளாக வழங்கப்படுகிறது. விருதாளர்களுக்கு சான்றிதழுடன் ரூ.2 லட்சம் பரிசும் வழங்கப்படுகிறது.

அதன் அடிப்படையில், இந்த ஆண்டுக்கு தனி நபர் பிரிவில், தரவு தூய்மைத்திட்டம் வாயிலாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ததற்காக, முதலமைச்சர் முகவரித்துறையின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் த.வனிதா, உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்ககையை விகிதத்தை கணிசமாக உயர்த்தியதற்காக விருதுநகர் ஆட்சியர் வீ.ஜெயசீலன், சென்னை பன்னாட்டு புத்தக கண்காட்சி வாயிலாக தமிழ் இலக்கிய படைப்புகளை உலக மொழிகளுக்கு எடுத்துச் செல்லவும், உலகின் சிறந்த நூல்களை தமிழில் மொழிபெயர்க்கவும் வழிவகை செய்ததற்காக பொது நூலககங்கள் துறை இயக்குநர் க.இளம்பகவத் ஆகியோருக்கு நல்லாளுமை விருது வழங்கப்படுகிறது.

அதே போல் அமைப்பு என்ற பிரிவில், உறுப்பு மாற்றுசிகிச்சை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலர் ந.கோபால கிருஷ்ணன், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை மகளிர் சுய உதவிக்குழுக்களை கொண்டு சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குநர் ச.திவ்யதர்சினிக்கும், நான் முதல்வன் திட்டம் வாயிலாக இளைஞர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி முறைகளில் புதுமை புகுத்தியதற்காக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழக மேலாண் இயக்குநர் ஜெ.இன்னசன்ட் திவ்யாவுக்கும் நல்லாளுமை விருது வழங்கப்படுகிறது.

தேர்வுக்குழுவின் பரிந்துரைப்படி, தமிழ்நாடு மாதிரிப்பள்ளிகள் வாயிலாக அரசுப்பள்ளி மாணவர்களை தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறச் செய்ததற்காக தமிழ்நாடு மாதிரிப்பள்ளிகள் உறுப்பினர் செயலர் இரா.சுதன், நத்தம் நில ஆவணங்கள் அனைத்தையும் மின்னுருவாக்கம் செய்து இணைய வழியில் பட்டா மாறுதல் செய்யும் வசதியை உருவாக்கியதற்காக ப.மதுசூதன் ரெட்டி, வரி ஆய்வுப் பிரிவு வாயிலாக ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவை வரிவருவாயை பெருக்கியதற்காக வணிகவரி ஆணையர் டி.ஜெகந்நாதன் ஆகியோருக்கு தலைமைச்செயலர் பாராட்டு சான்றிதழ்களை வழங்குகிறார்.

முதலமைச்சர் வழங்க உள்ள விருதுகள்

தகைசால் தமிழர் விருது

தகைசால் தமிழர் விருது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு வழங்கப்படுகிறது.

டாக்டர் ஏபிஜே.அப்துல் கலாம் விருது

இஸ்ரோவின் சந்திராயன் -3 விண்கல திட்ட இயக்குநர் பி.வீரமுத்துவேலுக்கு வழங்கப்படுகிறது.

துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது

வயநாடு நிலச்சரிவின் போது துணிச்சலாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த கூடலூரைச் சேர்ந்த செவிலியர் சபீனாவுக்கு துணிவு மற்றும் சாகசத்துக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது.

முதலமைச்சரின் சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருதுகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார். அந்த வகையில் சென்னை மாநகராட்சியில் உள்ள 14வது மண்டலம் சிறந்த மண்டலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த மாநகராட்சியாக கோவை மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.

சிறந்த நகராட்சியாக திருவாரூர் நகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த பேரூராட்சியாக கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் பேரூராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் விருதுகளை வழங்க உள்ளார்.

Tags :
Advertisement