“வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் அநீதி” - ஆ.ராசா!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா மற்றும் என்.ஆர். இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய எம்பி ராசா,
“தொகுதி மறுசீரமைப்பு என்பது மக்கள் தொகையின் அடிப்படையில் இருக்கக்கூடாது. தொகுதி விகிதாச்சாரமா ? மக்கள் தொகை விகிதாச்சாரமா? குழப்பமாக உள்ளது. தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ள பதில் குழப்பமாக உள்ளது. அவர் தெளிவான பதிலை அளிக்கவில்லை.
வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்பது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் அநீதி. எங்களுடைய மக்களவை தொகுதி எண்ணிக்கை குறையக் கூடாது என்பது மட்டுமல்ல, எங்களுக்கு அதே எண்ணிக்கையை வைத்துவிட்டு வடமாநிலங்களுக்கு மட்டும் அதிக எண்ணிக்கையில் கொடுத்தாலும் அநீதிதான்.
மத்திய அரசு கூறியதை ஏற்று மக்கள் தொகை எண்ணிக்கையை குறைத்த தமிழ்நாட்டிற்கு தரும் தண்டனையா இது. மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலங்களுக்கு அதிக எம்பி சீட்டுகள் கிடைக்கும்.
நாடாளுமன்றத்தில் வடமாநிலங்களுக்கு மட்டுமே அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும். மக்கள் தொகையை கட்டுப்படுத்தி இருக்கிறோம். அதனால் வளர்ச்சிப் பணிகளில் முன்னேறி இருக்கிறோம். பல்துறைகளில் தமிழ்நாடு நம்பர் இடத்தில் இருக்கிறது. இப்படி முன்னேறி இருக்கும்போது சட்டப்படி எங்களை தண்டிப்பது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல.