"கடந்த காலங்களில் காங்கிரஸ் அரசு தைரியமில்லாத அரசாக செயல்பட்டது" - எல்.முருகன் விமர்சனம்!
புதுச்சேரியில் உள்ள சட்டபேரவையை ரூ.8.16 கோடி செலவில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு தேசிய இ-விதான் செயலியை மத்திய தகவல் ஒளிபரப்பு துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல்.முருகன் இன்று தனியார் நட்சத்திர விடுதியில் துவங்கி வைத்தார். இதில் துணைநிலை ஆளுநர்
கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச்செயலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி பேசுகையில், "மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து துறை அதிகாரிகள் அதனை விரைந்து செயல்படுத்த வேண்டும், எவ்வளவு தொழில்நுட்ப வளர்ச்சி வந்தாலும் அதனை செயல்படுத்த வேண்டிய மனசும் அவர்களுக்கு வர வேண்டும்.
புதுச்சேரியில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளும் இது போன்ற தொழில்நுட்பங்களை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்வதாக" தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசுகையில், "டிஜிட்டல் இத்தியாவை திட்டத்தை அறிமுகப்படுத்திய போது அதனை விமர்சனம் செய்தார். அதிமேதாவியான முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம், ஆனால் டிஜிட்டல் இந்தியா மூலம் கடந்த 11 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி அதிகரித்துள்ளது.
27 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருந்து முன்னேறி உள்ளனர் என்றும் கடந்த காலங்களில் நாட்டை ஆண்ட காங்கிரஸ் அரசு ஒரு தைரியமில்லாத அரசாகத்தான் இருந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் 50 ஆயிரம் கோடிக்கு மேல் நாம் ஏற்றுமதி செய்துள்ளோம். சட்டமன்ற நிகழ்வுகளை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் நேரலை வழங்கும் வசதிகள் இந்த இ- விதான் செயலி மூலம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.