நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல்காந்தி தலைமையில் ‘இந்தியா' கூட்டணி எம்பிக்கள் போராட்டம்!
மத்திய விசாரணை அமைப்புகளை அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் INDIA கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதனையடுத்து 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24 ஆம் தேதி தொடங்கியது. அன்று பிரதமர் மோடி உள்பட, உறுப்பினர்கள் பலர் எம்பியாக பதவியேற்றனர். அன்று பதவியேற்காத பலரும் இரண்டாவது நாளாக ஜுன் 25 ஆம் தேதி பதவியேற்றனர்.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 39 எம்பிக்களும் பதவியேற்றனர். பதவியேற்பின் போது ஒவ்வொரு எம்பியும் ஒவ்வொரு முழக்கங்களை கூறி பதவிப் பிரமாணம் செய்தனர். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார்.
இதையும் படியுங்கள் : “விண்வெளி துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 வேலைவாய்ப்புகள்” – தமிழ்நாடு விண்வெளி தொழிற்கொள்கை வெளியீடு!
இதனையடுத்து, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் மீது விவாதம் நடந்தது. அப்போது, நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் விவாதம் செய்ய வலியுறுத்தினர். ஆனால், அனுமதி மறுத்ததால், இரு அவைகளிலும் அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், கடந்த வெள்ளிக்கிழமை அவை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், 2 நாட்களுக்குப் பின்பு நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடியது. இந்த கூட்டத்தில் ‘நீட்’ தேர்வு முறைகேடு, விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், அக்னிபாத் திட்டம் உள்பட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இந்நிலையில், நாடாளுமன்றம் கூடுவதற்கு முன் அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் மேற்கொண்டனர்.