For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘அன்பு மகளே..’ மறைந்த மகள் பவதாரிணி குறித்து இளையராஜா உருக்கமான பதிவு..!

09:51 PM Jan 26, 2024 IST | Web Editor
‘அன்பு மகளே  ’ மறைந்த மகள் பவதாரிணி குறித்து இளையராஜா உருக்கமான பதிவு
Advertisement

இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், மகள் உயிரிழப்பு குறித்து இசைஞானி இளையராஜா தனது முகநூல் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Advertisement

நடுத்தர குடும்பத்தில் பிறந்து தனக்கென தனி இடத்தை திரைத்துறையில் பிடித்தவர் இளையராஜா. நீண்ட காலம் தமிழ் சினிமா ரசிகர்களை வேறு இசையமைப்பாளரிடம் செல்லாத வகையில் தன்னுடைய இசையால் கட்டிப்போட்டவர் இளையராஜா.  ‘இசைஞானி’ என்று போற்றப்படும் அவரது மகள் பவதாரிணியும் இசை உலகில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை கொண்டிருப்பவர்.

பவதாரிணி, தன்னுடைய மெல்லிய குரல் வளத்தால் இளசுகளை கட்டி போட்டவர். இளையராஜாவின் இசையில் ராசையா படத்தில் இடம் பெற்று இருக்கும் மஸ்தானா மஸ்தானா பாடல் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானவர். தன்னுடைய திரை இசை பயணத்தின் தொடக்கம் முதலே தந்தை இளையராஜா, அண்ணன் கார்த்திக் ராஜா, தம்பி யுவன் ஷங்கர் ராஜா இசையில் பயணித்தவர்.

காதலுக்கு மரியாதை படத்தில் இன்றும் இளசுகளால் ரசிக்கப்படும் ‘என்னை தாலாட்ட வருவாளா’ என்ற பாடல் பவதாரணிக்கு கைவசமாக அமைந்த பாடல் என்றே சொல்லலாம். இளையராஜா இசையில் வெளியான பாரதி படத்தில்  ‘மயில் போல’ என்ற பாடல் அவருக்கு தேசிய விருது வாங்கி கொடுத்தது. தன்னுடைய குரலின் தனி தன்மையே பவதாரணியை தனியாக அடையாளப்படுத்தும். அழகி படத்தில் அவர் பாடிய ‘ஒளியிலே தெரிவது’ பாடல் மிகப்பெரிய அளவிற்கு பேசப்பட்டது.

இந்நிலையில் 47 வயதாகும் பவதாரிணி கடந்த 5 மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த பவதாரிணி ஜனவரி 25ம் தேதி மாலை 5.30 மணி அளவில் காலமானார். இலங்கை தலைநகர் கொழும்புவில் வரும் ஜனவரி 27 ஆம் தேதி மற்றும் ஜனவரி 28 ஆம் தேதி ‘இளையராஜா லைவ் இன் கான்செர்ட்’ என்ற பெயரில் இசை கச்சேரி நடைபெறவிருந்தது. அந்த நிகழ்வுக்காக இலங்கை சென்ற இளையராஜாவுக்கு இது எதிர்பாராத சோகம் தான்.

பவதாரிணி இறப்பிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மறைந்த பாடகி பவதாரிணியின் உடல் விமானம் மூலம் இலங்கையிலிருந்து சென்னை வந்தடைந்து, தி.நகரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக  வைக்கப்பட்டுள்ளது. மேலும், தி.நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்தில் பாடகி பவதாரிணி உடலுக்கு நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதையடுத்து, தற்போது இளையராஜா உருக்கமான பதிவு ஒன்றைத் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தனது மகள் குழந்தையாக இருக்கும் போது எடுத்த படத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இளையராஜா, "அன்பு மகளே" என்று பதிவிட்டுள்ளார். இளையராஜாவின் இந்த பதிவுக்கு கீழ் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags :
Advertisement