ஐஐடி மாணவர் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் - தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு விபரீத முடிவு!
மும்பை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT Bombay) நான்காம் ஆண்டு படித்து வந்த மாணவர் ரோஹித் சின்ஹா (26), தனது விடுதியின் மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்து கொண்ட சம்பவம், சக மாணவர்களையும், ஆசிரியர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரோஹித், மும்பை ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதி எண் 15-ல் தங்கிப் படித்து வந்தார். நேற்று மாலை, விடுதி மாடியின் ஓரத்தில் நின்று அவர் தனது செல்போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்ததாக, நேரில் கண்ட சக மாணவர் ஒருவர் காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளார். சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர் மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரது உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
ரோஹித் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பவாய் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தனது விடுதி அறையில் ஏதேனும் கடிதம் எழுதி வைத்திருக்கிறாரா என சோதனை செய்யப்பட்டுள்ளது. அவரது செல்போன் அழைப்பு விவரங்கள் மற்றும் அவர் கடைசியாக பேசியது யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரோஹித் குடும்பத்தினரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். தற்கொலைக்கான காரணம் தனிப்பட்ட பிரச்சினையா அல்லது கல்வி தொடர்பான அழுத்தமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஐஐடி போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களில், மாணவர்களின் மீதான கல்வி அழுத்தம், எதிர்கால கனவுகள் மற்றும் சமூக எதிர்பார்ப்புகள் ஆகியவை அதிகமாக இருப்பதால், மனநலப் பிரச்சினைகள் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.
மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் மையங்கள் இருந்தாலும், பலர் அவற்றைப் பயன்படுத்தத் தயங்குவதாகவும், இது போன்ற துயரச் சம்பவங்கள் நடப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.