For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"வசதிகள் இல்லையென்றால் ஓட்டு இல்லை" - தேர்தலை புறக்கணிக்கப் போவதாக மக்கள் அறிவிப்பு!

அடிப்படை வசதிகள் இல்லாததால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.
06:50 PM Aug 02, 2025 IST | Web Editor
அடிப்படை வசதிகள் இல்லாததால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.
 வசதிகள் இல்லையென்றால் ஓட்டு இல்லை    தேர்தலை புறக்கணிக்கப் போவதாக மக்கள் அறிவிப்பு
Advertisement

Advertisement

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு தாலுகாவில் உள்ள கிழவன்கோயில், பட்டுப்பூச்சி உள்ளிட்ட பல கிராமங்களில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வரவிருக்கும் தேர்தல்களைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

இந்த கிராமங்களில் சாலைகள், கழிவுநீர் வாய்க்கால்கள், பொதுக்கழிப்பறைகள், குடிநீர் வசதி, தெருவிளக்குகள் மற்றும் தடையற்ற தொலைத்தொடர்பு சேவைகள் என எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என்று கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சாலை வசதி இல்லாததால் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் கிராமத்திற்குள் வர முடிவதில்லை. இதனால், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நோயாளிகளைத் தூக்கிக்கொண்டு பிரதான சாலைக்கு செல்ல வேண்டிய அவலம் நிலவுகிறது. கழிவுநீர் வாய்க்கால்கள் இல்லாததால் மழைக்காலங்களில் வீடுகளுக்குள் நீர் புகுந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

மேலும், இந்தப் பகுதிகளில் தொலைத்தொடர்பு கோபுரங்கள் இல்லாததால் செல்போன் சேவை கிடைப்பதில்லை. இதனால், வெளியூரில் வசிக்கும் உறவினர்களுடன் தொடர்புகொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது. அரசு அதிகாரிகளிடமும், அரசியல்வாதிகளிடமும் பலமுறை கோரிக்கை வைத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பல ஆண்டுகளாக அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் மட்டுமே கிடைப்பதாகவும், எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் கிராம மக்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், தங்கள் கிராமத்திற்கு உடனடியாக அடிப்படை வசதிகளை அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் உட்பட அனைத்துத் தேர்தல்களையும் முழுமையாகப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

இந்த கிராம மக்களின் போராட்ட அறிவிப்பு, மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசியல் கட்சிகளுக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, கிராம மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
Advertisement