"இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்" - ராகுல்காந்தி பேச்சு!
மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.
இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கி விட்டது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக கடந்த 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதை தொடர்ந்து ஏப்.26ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும், மே 7 ஆம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது. இறுதி மற்றும் 7-ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறும் எனவும், ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார். இது தொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலம், கும்லாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கூறியதாவது:
"அக்னிபத் திட்டத்தை மோடி தான் கொண்டு வந்தார். ராணுவம் கொண்டுவரவில்லை. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அக்னிபத் திட்டத்தை நீக்கிவிடும். நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்யும் ராணுவ வீரர்களிடையே பாரபட்சம் காட்ட நாங்கள் விரும்பவில்லை.
தேசத்துக்காக உயிர்த்தியாகம் செய்யும் எந்த ஒருவருக்கும் தியாகி அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். 5 வகையான வரி விகிதங்களைக் கொண்ட தவறான ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை பாஜக அரசு அமல்படுத்தியுள்ளது. நாங்கள் இதை மாற்றி குறைந்தபட்ச வரி விகிதம் கொண்ட ஜிஎஸ்டியைக் கொண்டுவருவோம். ஏழைகள் மீதான வரியை நாங்கள் குறைப்போம்.
மத்திய அரசு பழங்குடியினருக்கு துரோகம் இழைத்து வருகிறது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் திறப்பு விழாவுக்கும், அயோத்தியில் சிலை பிரதிஷ்டை விழாவுக்கும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அழைக்காததன் மூலம் அவரை பிரதமர் மோடி அவமதித்து விட்டார். பொதுத்துறை நிறுவனங்கள், ரயில்வே போன்றவற்றை தனியார் தொழிலதிபர்களுக்குத் தாரை வார்க்க பாஜக உத்தேசித்துள்ளது."
இவ்வாறு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.