"பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தும் சூழல் உருவாகும்!" - கனிமொழி எம்பி பேச்சு
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி வரும் மகளிர் உரிமைத் தொகை நிறுத்தும் சூழல் உருவாகும் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திமுக மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட கனிமொழி எம்பி கூறியதாவது:
"வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல், மிகவும் முக்கியமான தேர்தல் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். மிகவும் பாடுபட்டு தான் பெண்கள் தங்கள் உரிமைகளை பெற்றுள்ளோம்.
ஒரு காலகட்டத்தில் சமஸ்கிருதம் படித்தால் மட்டும் தான் மருத்துவராக முடியும் என்ற நிலை இருந்தது. அதையெல்லாம் மாற்றியது திராவிட இயக்கம். டெல்லியில் இருக்கக்கூடிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கஷ்டப்பட்டு போராடி பெற்ற உரிமைகளை பறிக்கின்றனர். மருத்துவத் துறையில் யார் வேண்டுமென்றாலும் படிக்கலாம் என்று கூறி இட ஒதுக்கீடு கொண்டு வந்தது திமுக.
ஏழை எளிய மக்கள் மருத்துவம் படிக்க வேண்டும் என்றால் அரசு மருத்துவ கல்லூரி இருக்க வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு மாவட்டம் தோறும் அரசு மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்துள்ளோம். இந்தியாவிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகள் இருப்பது தமிழ்நாட்டில் தான்.
இதையெல்லாம் ஒழிக்க கூடிய வகையில் தான் நீட் தேர்வை கொண்டு வந்துள்ளனர். நமக்காக உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியில் நமது குழந்தைகள் படிக்க முடியாத நிலையை கொண்டு வந்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவரும் புதிய கல்விக் கொள்கை நம்மை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால் அது அவ்வாறு கொண்டு சொல்லவில்லை.
மத்திய அரசு கொண்டுவரும் புதிய கல்விக் கொள்கை சட்டத்தில் அனைத்து கல்லூரி படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு என்ற நிலையை உருவாக்க துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சட்டத்தை கொண்டு வந்தால் நமது பிள்ளைகள் எந்த கல்லூரிக்கும் போக முடியாத நிலை ஏற்படும்.
வரும் தேர்தல் என்பது பெண்களின் உரிமைகளை பாதுகாக்க கூடிய தேர்தல். நம்முடைய அடுத்த தலைமுறை வாழ்க்கை கெட்டுப் போகாமல் இருக்க, அவர்களை பாதுகாக்க வேண்டும் என்றால் இந்த தேர்தலில் நாம் கடுமையாக உழைக்க வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தல் என்பது யார் ஜெயிக்கிறார்? யார் தோல்வி பெறுகிறார் என்பது கிடையாது.
இந்த தேர்தல் நம் குழந்தையின் எதிர்காலம் மற்றும் நாம் அமைதியாக வாழ்வதை முடிவு செய்யக்கூடிய தேர்தல். தமிழ்நாட்டில் அனைவரும் சகோதரர்களாக ஒற்றுமையாக வாழ்கிறோம். மதத்தினை வைத்து நமக்குள் சண்டையை ஏற்படுத்தி அதில் அரசியல் லாபம் அடைய வேண்டும் என்று நினைத்தால் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும்.
மணிப்பூரில் இரண்டு குழுக்கள் இடையே பிரச்னை. இதுவரை பிரதமர் மோடி அங்கு சென்று பார்க்கவில்லை. அந்த மாநிலத்தில் இருக்கும் எல்லோரும் வீட்டை விட்டு வெளியேறி வேறு இடங்களில் தங்கி அவதியுற்று வருகின்றனர். அங்கு குழந்தைகள் , பெண்கள் எல்லோரும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறனர்.
தமிழ்நாட அரசு மக்களை பாதுகாக்கிறது. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு போதிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. மேலும் அந்த திட்டத்திற்கான நிதி உதவிகளை தொடர்ந்து குறைத்துக் கொண்டிருக்கிறது. பல மாநிலங்களிலும் இதே நிலைதான் நடக்கிறது. மக்களுக்கான திட்டங்களை மத்திய அரசு குறைத்துக் கொண்டே வருகிறது.
மழை, வெள்ளம் பாதிப்புக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிவாரணம் வழங்கவில்லை. தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்கக்கூடிய ஜிஎஸ்டி வரிப்பாக்கி என்பது 20 ஆயிரம் கோடியாக உள்ளது. பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி வரும் மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது.
மகளிர் உரிமைத் தொகையை கூட கொடுக்க முடியாத நிலை வந்துவிடும் என்று நம்முடைய முதலமைச்சரே சொல்லக்கூடிய அளவிற்கு தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு பிரச்னைகளை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றனர். வெள்ள பாதிப்புக்கு நிதி கேட்டாலும் பணம் தருவதில்லை. வரவேண்டிய வரி நிலுவைத் தொகையும் தருவதில்லை, தமிழ்நாடு அரசின் எந்தத் திட்டத்திற்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நிதி கொடுப்பதில்லை.
பாஜகவினர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும்போது எங்களுக்கு கொடுக்க வேண்டிய நிதி எங்கே என்று கேளுங்கள். மழை, வெள்ளத்தினால் சென்னை, தூத்துக்குடி பாதிக்கப்பட்ட போது எங்கே போயிருந்தீர்கள் என்று கேளுங்கள். மழை வெள்ளத்தினால் சேதமடைந்த வீட்டிற்கு எங்கள் முதலமைச்சர் 4 லட்ச ரூபாய் கொடுத்தார். நீங்கள் என்ன கொடுத்தீர்கள் என்று கேளுங்கள்.
நாம் எல்லாவற்றுக்கும் பொருத்துப் போவோம் என்று நினைக்கிறார்கள். இங்கு உள்ள பெண்கள் பொங்கி எழுந்தாலே அவர்களை ஓட வைக்க முடியும் என்பதை புரிய வைப்போம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி என்பது இந்த நாட்டை பாதுகாக்க கூடிய வெற்றி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்."
இவ்வாறு கனிமொழி கூறினார்.