For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி - பாகிஸ்தான் செல்ல இந்திய அணி மறுப்பு!

11:52 AM Jul 11, 2024 IST | Web Editor
ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி   பாகிஸ்தான் செல்ல இந்திய அணி மறுப்பு
Advertisement

ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் பங்கேற்க  பாகிஸ்தான் செல்ல இந்திய அணி மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

“மினி உலக கோப்பை” என அழைக்கப்படும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் போட்டி 1998-ம் ஆண்டு வங்காளதேசத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் தென்ஆப்பிரிக்கா கோப்பையை கைப்பற்றியது. இதுவரை 8 போட்டித் தொடர் நடைபெற்றுள்ளது. கடைசியாக 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் கோப்பையை வென்றது.

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியை 8 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் முதல் தடவையாக நடத்துகிறது. பாகிஸ்தான் நாட்டில் நடைபெறுவதால் அந்த அணியே அட்டவணையை அறிவிக்கும். அந்த அட்டவணையை ஐசிசி-யிடம் பரிந்துரைக்கும். ஐசிசி மற்றும் மற்ற நாடுகள் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றால் அந்த அட்டவணைப்படி போட்டி நடைபெறும்.

பாகிஸ்தானில் நடக்கும் இந்த சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் பங்கேற்க 8 அணிகள் தகுதி பெற்றுள்ளன. சொந்த மண்ணில் நடப்பதால், பாகிஸ்தான் அணி கட்டாயம் விளையாடும். அதேபோல் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் தவிர்த்து டாப் 7 இடங்களை பிடித்த அணிகள் இந்த தொடரில் விளையாடவுள்ளன. இது பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

அதேபோல் குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே பாகிஸ்தானில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஐசிசி பாதுகாப்பு குழு ஆய்வு செய்துள்ளது. இருந்தாலும் அரசியல் காரணங்களால் இந்திய அணி பாகிஸ்தான் சென்று சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அறிவித்த அட்டவனையில் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டிகள் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 19-ல் தொடங்கி மார்ச் 9-ந் தேதி முடிவடைகிறது. அதன்படி முதல் 20 நாளில் 15 போட்டிகள் நடைபெற உள்ளது. லாகூரில் அதிகபட்சமாக 7 போட்டிகள் நடைபெற உள்ளது. மார்ச் 1-ந் தேதி இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி லாகூர் மைதானத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் பங்கேற்க  பாகிஸ்தான் செல்ல இந்திய அணி மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் துபாய் அல்லது இலங்கையில் போட்டிகளை நடத்துமாறு ஐசிசியிடம் பிசிசிஐ கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement