கட்சிக்கு உறுதுணையாக இருப்பேன்: மல்லை சத்யா அறிக்கை!
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக நேற்று துரை வைகோ எம்பி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், இன்று ராஜினாமா முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். சென்னையில் நடைபெற்ற மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.
மல்லை சத்யா, துரை வைகோ இருவரும் இதுவரை இருந்த மனக்கசப்புகளை மறந்துவிட்டு இணைந்து பணியாற்ற பொதுச் செயலாளர் வைகோ அறிவுறுத்தியதன் பேரில் இந்த முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கட்சிக்கும், வைகோவிற்கும், துரை வைகோவிற்கும் உறுதுணையாக இருப்பேன் என மல்லை சத்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
“சமூக ஊடகங்களில் வந்த பதிவுகளால் கட்சியில் கசப்புணர்வு ஏற்படுகின்ற நிலையும், அதனால் மறுமலர்ச்சி தி.மு.கவின் கட்டுப்பாட்டுக்கு ஊறு நேருகின்ற நிலையும் ஏற்பட்டதற்கு இன்று கட்சி நிர்வாகக் குழுவில் எனது மனப்பூர்வமான வருத்தத்தை தலைவர் வைகோவிடமும், நிர்வாகக் குழு உறுப்பினர்களிடமும் தெரிவித்துக் கொண்டேன். இது போன்ற சூழல் இனி எதிர்காலத்தில் நிகழாது.
பொதுச்செயலாளர் வைகோவிற்கும், கட்சியின் எதிர்காலம் முதன்மைச் செயலாளர் துரை வைகோவிற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று நான் உறுதி அளித்தேன். இதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு துரை வைகோ முதன்மைச் செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயல்படுவேன் என்று நிர்வாகக் குழுவில் அறிவித்தது எனக்கும், தொண்டர்களுக்கும் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நானும், முதன்மைச் செயலாளர் துரை வைகோவும் இணைந்த கரங்களாக வைகோவிற்கும், கட்சிக்கும் துணையாக செயல்படுவோம். கட்சியைக் கட்டிக் காப்போம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டு அரசியல் களத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. வலிவுடன் தழைத்தோங்கி நிற்க பணியாற்றுவோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.