“என்றும் இஸ்லாமியர்களுக்கு துணையாக இருப்பேன்” - எடப்பாடி பழனிசாமி!
அதிமுக சார்பில் ரமலான் மாதத்தை முன்னிட்டு இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் இன்று (மார்ச் 21) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று நோன்பு திறந்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
“இஸ்லாமியர்கள் குறித்து தவறாக சித்தரித்து காட்சிகள் எடுத்தபோது அதை உறுதி பட எதிர்த்தவர் ஜெயலலிதா. அதேபோல் இஸ்லாமிய மக்கள் மீது அன்பு வைத்து வந்தவர் எம்ஜிஆர்.
அந்த ஒப்பற்ற இருபெரும் தலைவர்களால் அரசியலில் உருவாக்கப்பட்டவன் நான். பதவிக்காவோ, புகழ்ச்சிக்காகவோ அரசியலுக்கு வந்தவனல்ல இந்த பழனிசாமி. மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற பேரறிஞர் அண்ணாவின் கொள்கையால் கவரப்பட்டு, மக்களுக்குத் தொண்டாற்ற அரசியலுக்கு வந்த தொண்டன் நான். எனக்கு எந்தவித தனிப்பட்ட கருத்தும், நிலைப்பாடும் கிடையாது.
சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட தமிழனாக, இந்தியனாக இயல்பாகவே வாழ்ந்துவரும் நான் எல்லோருக்கும் சம நீதியும், சம பாதுகாப்பும், சம உரிமையும் கிடைக்க வேண்டும் என்று உளமார நினைப்பவன். எண்ணிக்கையில் குறைவாக உள்ள சிறுபான்மையினரை பாதுகாத்து, அரவணைத்து, அன்பு செலுவதை, என் தலையாய கடமையாகக் கொண்டு பொதுவாழ்வில் ஈடுபட்டிருக்கும் நான், என்றைக்கும் இஸ்லாமியர்களுக்கு துணையாக இருப்பேன் என்ற உறுதியளிக்கிறேன்.
ஆண்டவனை துணையாக கொண்டவர்களை யாரும் அழிக்க முடியாது என்று நபிகள் நாயகம் தெரிவித்துள்ளார். அதிமுக மக்களின் பன்முக தன்மையை ஏற்று கொண்டு செயல்படும். அவரவருக்கு வழங்கப்பட்டிருக்கும் தனித் தன்மையை நாங்கள் மதிக்கிறோம், போற்றுகிறோம், வணங்குகிறோம், பாதுகாக்கிறோம்” என்று கூறினார்.