"உன்ன நம்பி கூப்டதுக்கு.. உன்னால என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிட்ட" - திருமண விருந்தில் கூடுதல் பன்னீர் வழங்காததால் ஆத்திரம்... மினிபஸ் ஓட்டுநர் எடுத்த அதிரடி முடிவு!
உத்தரபிரதேசத்தின் சந்தௌலி மாவட்டத்தில் உள்ள ஹமீத்பூர் கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில், திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. மறுபக்கம் இதில் கலந்துக்கொண்டவர்களுக்கு விருந்து பரிமாரப்பட்டது. இந்த கொண்டாட்டத்திற்கு தர்மேந்திர யாதவ் என்ற மினிபஸ் ஓட்டுநர் சென்றிருந்தார். யாதவ் திருமண மண்டபத்தில் உணவருந்த சென்றார். அப்போது, யாதவ் உணவு கவுண்டரில் கூடுதல் பன்னீர் வழங்குமாறு கேட்டார். அதற்கு உணவு பரிமாறியவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் : “இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது” – பஹல்காம் தாக்குதலுக்கு நடிகர் அஜித்குமார் கண்டனம்!
இதனால் ஆத்திரமடைந்த யாதவ் அவர்களை பழிவாங்க முடிவு செய்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து, அதிர்ச்சியூட்டும் வகையில், யாதவ் தனது மினிபஸ்ஸை நேராக திருமண மண்டபத்திற்குள் ஓட்டிச் சென்றார். அந்த வாகனம் விருந்தினர்கள் மீது மோதி மண்டப சுவரில் மோதியது. இதில் மணமகனின் தந்தை மற்றும் மணமகளின் மாமா உட்பட 5 பேர் காயமடைந்தனர். யாதவ் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடினார்.
அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் திருமண கொண்டாட்டங்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. பின்னர் காவல்துறையினர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இந்த சம்பவம் குறித்து உள்ளூர் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தப்பி ஓடிய யாதவை பிடிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.